இனி சாலைகளில் இசை மழையில் நனைய தயாரா? ஹாரன்களில் வரப்போகும் முக்கிய மாற்றம்! நிதின் கட்காரி தகவல்
டெல்லி: கடந்த சில நாட்களாகவே பாஸ்டேக் முறை முடிவுக்கு வருவதாகத் தகவல் பரவி வந்த நிலையில், இது தவறான தகவல் எனச் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் விளக்கமளித்திருந்தது. இதற்கிடையே இந்திய சாலைகளில் மிக முக்கியமான ஒரு மாற்றத்தைக் கொண்டு வரச் சட்டம் இயற்றவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
உலகின் எந்தவொரு நாடாக இருந்தாலும் சாலைப் போக்குவரத்து தான் உயிர்நாடி.. முக்கிய நகரங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சாலைப் போக்குவரத்தால் மட்டுமே இணைக்க முடியும். ஒரு நாட்டில் எந்தளவுக்கு விரிவான சாலைப் போக்குவரத்து இருக்கிறதோ.. அந்தளவுக்கு வளர்ச்சி சீராக இருக்கும்.

இந்தியச் சாலைகள்
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே சாலைப் போக்குவரத்தை விரிவாக்கம் செய்யப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக முக்கிய நகரங்களுக்கு இடையே போக்குவரத்தை எளிமையாகப் புதிய எக்ஸ்பிரஸ் வே மற்றும் நெடுஞ்சாலைகள் வேகமாகக் கட்டப்பட்டு வருகிறது. சாலைகள் அமைப்பது மட்டுமின்றி பல புதுமைகளும் சாலைப் போக்குவரத்தில் கொண்டு வரப்படுகிறது.
பாஸ்ட் டேக்
அப்படிதான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்ட் டேக் கொண்டு வரப்பட்டது. அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்குச் சங்கச்சாவடியில் நிற்பது எவ்வளவு மோசமான அனுபவம் என்பது தெரிந்திருக்கும். ஒரு சில சுங்கச்சாவடிகளில் நாம் நீண்ட நேரம் காத்திருந்தே கடக்க வேண்டி இருக்கும். இந்த முறையை மாற்றவே கடந்த 2014ல் சோதனை முறையில் பாஸ்ட் டேக் திட்டம் கொண்டுவரப்பட்டது. 2016ல் அது நாடு முழுக்க விரிவுபடுத்தப்பட்டது. முதலில் ஆப்ஷனலாக இருந்த பாஸ்ட் டேக், கடந்த 2021ல் கட்டாயமாக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டில் பாஸ்ட்டேக் முறை முடிவுக்கு வருவதாகத் திடீரெனத் தகவல் வெளியானது. அதாவது வரும் மே 1ம் தேதி முதல் பாஸ்ட் டேக் முறைக்குப் பதிலாக ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் முறை பின்பற்றப்படவுள்ளதாகச் சொல்லப்பட்டது. இது இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து உடனடியாக அப்படி எந்தவொரு திட்டமும் இல்லை என சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் விளக்கமளித்தது.
மாற போவது ஹாரன் தான்
இந்தச் சூழலில் தான் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்தியச் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்திய சாலைகளில் ஹாரன்களால் ஏற்படும் ஒலி மாசைக் கட்டுப்படுத்தும் திட்டம் குறித்துப் பகிர்ந்து கொண்டார். அதாவது தற்போதுள்ள ஹாரன்களுக்கு பதிலாக இந்திய இசைக்கருவிகளின் ஒலிகளை ஏற்படுத்தும் ஹாரன்களை கட்டாயமாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக நிதின் கட்கரி கூறினார்.
நிதின் கட்காரி
இதன் மூலம் பயண அனுபவத்தை இனிமையாக்க முடியும் என நம்புவதாகக் குறிப்பிட்டார். அதாவது இந்தியச் சாலைகளில் விரைவில் மாறப் போவது பாஸ்ட் டேக் இல்லை.. மாறாக ஹாரன்களே மாறப்போகிறது. இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அனைத்து வாகனங்களின் ஹாரன்களிலும் இந்திய இசைக்கருவிகளில் இருக்க வேண்டும்.. அப்போதுதான் அவை கேட்க இனிமையாக இருக்கும்.. புல்லாங்குழல், தபலா, வயலின், ஹார்மோனியத்தின் சத்தங்களைப் பயன்படுத்தலாம். இந்தியச் சாலைகளில் மென்மையான ஒலி சூழலின் அவசியம்" என்று அவர் தெரிவித்தார்.
மற்ற நாடுகளைக் காட்டிலும் நமது நாட்டில் ஹாரன் பயன்பாட்டு உண்மையில் அதிகம் தான். டிராபிக் அதிகமாக இருக்கும்போது அடிக்கும் ஹாரனை கேட்டால் தலையே வெடித்துவிடுவது போல இருக்கும். சாலைகளில் ஏற்படும் காற்றுமாசு குறித்துப் பேசும் பலரும் கூட ஒலி மாற்று குறித்து பெரிதாகப் பேச மாட்டார்கள். இந்தச் சூழலில் தான் அதற்கான தீர்வையும் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications