நீட் குற்றவாளிகள் வினாத்தாள் நகலையும் எடுத்து சென்றனர்.. உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பகீர்
டெல்லி: நீட் நுழைவுத் தேர்வு வழக்கில் சிக்கிய குற்றவாளிகள், தேர்வு மையங்களில் இருந்து வினாத்தாள்களையும் ரகசியமாக எடுத்துச் சென்றதாக அதிர்ச்சித் தகவலை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இத்தகையவை 'சிறு' தவறுகள்தான் என்றும் இதற்காக நீட் தேர்வையே ரத்து செய்யக் கூடாது எனவும் அந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வுகள் முறைகேடுகள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தேசியத் தேர்வு முகமை இன்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம்: பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனை வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த மாணவர்களில் சிலர் தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர்களுக்கு தெரியாமலேயே ரகசியமாக வினாத்தாளை நகலெடுத்துச் சென்றுள்ளனர். இதன் மூலமாகவும் முறைகேடுகள் நிகழ்த்தப்பட்டன.

பொதுவாக நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள், தேசிய தேர்வுகள் முகைமையின் தலைமை அலுவலகத்தில் மட்டுமே தயாரிக்கப்படும். வல்லுநர்கள் தரும் வினாக்கள் இடம் பெறுமா? இடம்பெறாதா? இடம் பெறுகிறதா? இல்லையா? என்பதும் அவர்களுக்கு தெரியாது.
நீட் நுழைவுத் தேர்வு, தேசியத் தேர்வு முகமையால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட அச்சகங்களில்தான் அச்சிடப்படுகிறது. அப்படி அச்சிட்ட பின்னர் இந்த வினாத்தாள்கள் சீலிடப்பட்ட நிலையிலான பெட்டிகளில் பாதுகாக்கப்படும். பின்னரே தேர்வு எழுதும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நடைமுறை தேர்வு முகமையால் கண்காணிக்கப்படும்.
நீட் நுழைவுத் தேர்வு விவகாரங்களில் சிறிய அளவுதான் பிரச்சனை. இதற்காக போய் ஒட்டுமொத்தமாக அத்தனை லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வையே ரத்து செய்ய கூடாது. அது பல லட்சம் மாணவர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி. ஆகையால்தான் நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது என்கிறோம்.
நீட் தேர்வு தொடர்பாக 63 புகார்கள் தேசிய தேர்வு முகமைக்கு கிடைக்கப்பெற்றன. இதில் 33 மாணவர்களின் முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளோம். 22 மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் தடை விதித்துள்ளோம்.
9 மாணவர்களின் முடிவுகளை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளோம். இது விசாரணை குழுவின் பரிந்துரைகள்.
மேலும் நீட் தேர்வுகளுக்கு எதிரான அனைத்து பொதுநலன் வழக்குகளுக்கும் அபராதம் விதித்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இவ்வாறு தேசிய தேர்வு முகமையின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications