ஓமிக்ரான் சாதாரண சளியா?.. ரொம்ப தப்பு.. ஐசிஎம்ஆர் விஞ்ஞானிக்கு கவுன்ட்டர் கொடுத்த மத்திய அரசு
டெல்லி: ஓமிக்ரான் சாதாரண சளியை போன்றது என்றும் அது அனைவரையும் வேகமாக தொற்றிக் கொள்ளும் என்று மத்திய அரசின் மூத்த நிபுணர் நேற்றைய தினம் கூறியிருந்ததை மத்திய அரசு மறுத்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட்டான ஓமிக்ரான் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி முதல் பரவி வருகிறது. இதில் நாடு முழுவதும் நேற்றைய நிலவரப்படி 4,868 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் நேற்று ஒரே நாளில் 407 பேருக்கு புதிதாக ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிராவில் 1,281 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் தமிழகத்தில் இதுவரை 185 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓமிக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் ஏற்படும் பாதிப்பை பொருத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள்.

ஓமிக்ரான் பரவும் நிலை
இந்த நிலையில் ஓமிக்ரான் வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் மருத்துவமனையில் மக்கள் அனுமதிக்கப்படுவது டெல்டாவை காட்டிலும் சற்று குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து ஐசிஎம்ஆரின் தேசிய தொற்று நோய் துறையின் விஞ்ஞான ஆலோசக குழுவின் தலைவர் டாக்டர் ஜெய்பிரகாஷ் முலியில் கூறுகையில் 2ஆவது அலை வரும் போதிலிருந்தே கொரோனாவுடன் வாழ நாம் பழகிவிட்டோம்.

கொரோனா பாதிப்பு
தற்போது ஓமிக்ரான் குறித்து அரசு வெளியிட்டுள்ள எண்ணிக்கையிலும் உண்மையில்லை. 60 முதல் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது ஒரு எண்ணிக்கை கொண்ட பாதிப்பாகவே அறிவிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் ஓமிக்ரான் பாதிப்போர் குறித்த எண்ணிக்கையானது 60 முதல் 90 மடங்கு அதிகமாகவே இருக்கும்.

லேசான அறிகுறி
டெல்டாவை விட மிகவும் லேசான அறிகுறிகளையே ஓமிக்ரான் கொடுக்கிறது. ஓமிக்ரான் சாதாரண சளி போல் பரவி வருகிறது. அதிகமாக பரவினாலும் நிறைய பேருக்கு ஓமிக்ரானால் பாதித்ததே தெரியவில்லை. ஓமிக்ரான் டெல்டாவை போல தீவிரமாக பரவியிருந்தால் இந்நேரம் ஆக்ஸிஜன் படுக்கைகள் தேவைப்படும் நிலை அதிகரித்திருக்கும். தற்போது குறைந்த பாதிப்பை ஏற்படுத்துவதால் சொற்ப அளவிலேயே மருத்துவமனையில் மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

சாதாரண சளி
ஓமிக்ரான் எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லை. இது எளிதில் சந்திக்கக் கூடிய நோய். எத்தனை நாட்களுக்குத்தான் பயந்து கொண்டிருப்பது? என கேள்வி எழுப்பியிருந்தார். ஐசிஎம்ஆரின் மூத்த விஞ்ஞானியின் கருத்தை மத்திய அரசின் மூத்த கொரோனா ஆலோசகர் விகே பால் மறுத்துள்ளார். அவர் கூறுகையில் ஓமிக்ரான் சாதாரண சளி அல்ல. விட்டால் மருத்துவ கட்டமைப்பை வேகமாக பாதிக்கக் கூடியது. அதிகமாக பரவி வருகிறது. அதை குறைப்பது நமது கடமை.

தடுப்பூசி
மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். யாரெல்லாம் இன்னும் தடுப்பூசி போடவில்லையோ அவர்கள் எல்லாம் போட்டு கொள்ளுங்கள். கொரோனாவுக்கு சிறந்த மருந்து தடுப்பூசிதான். ஓமிக்ரான் வேகமாக பரவி கொண்டிருக்கிறது என்பது தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் என டாக்டர் பால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications