வெளிமாநில பதிவெண் ஆம்னி பஸ்கள் விவகாரம்.. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
டெல்லி: பிற மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயங்க அனுமதி கிடையாது என போக்குவரத்து துறை அறிவித்தது. மேலும் விதி மீறி இயங்கும் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயங்குவதற்கு தடை விதிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு சிறிய நகரங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் பலரும் ஆம்னி பஸ்களை நாடி செல்வதை பார்க்க முடிகிறது.

சிறிய குக்கிராமங்கள் வழியாக ஆம்னி பஸ்கள் செல்வதால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பலரும் இந்த ஆம்னி பஸ்களையே அதிகம் நாடி செல்கிறார்கள். குறிப்பாக பண்டிகை நாட்கள், வார இறுதிநாட்களில் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தப்படுவதாக பயணிகள் இந்த ஆம்னி பஸ் நிறுவனங்கள் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.
இது ஒருபக்கமென்றால் ஆம்னி பஸ்கள் பலவும் வெளி மாநில பதிவெண்களுடன் இயங்குவதை பார்த்து இருக்க முடியும். உதாரணத்திற்கு பாண்டிச்சேரி, நாகலாந்து (NL) உள்ளிட்ட பதிவெண்களுடன் அதிக அளவிலான ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இப்படி வெளிமாநில பதிவெண் கொண்ட 652 ஆம்னி பேருந்துகளால் ஆண்டொன்றுக்கு தமிழக அரசுக்கு ரூ.28.16 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும் வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழக பதிவு எண்ணாக மாற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வந்தது.
இதற்கான அவகாசத்தை ஆம்னி பேருந்து சங்கத்தினர் நீட்டிப்பு செய்ய வலியுறுத்தியதால், அவ்வப்போது அவகாசத்தை அரசு நீட்டித்து வந்தது. எனினும், 18 ஆம் தேதியுடன் இந்த அவகாசம் முடிந்தது. அதன்படி, விதிகளை மீறி இயக்கப்பட்ட வெளிமாநில ஆம்னி பேருந்துகள் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
முன்னதாக இந்த பஸ்களில் முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும், முன்பதிவு செய்திருந்தால் உடனே மாற்றிக்கொள்ளவும் என்றும், பயணிக்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் வெளிமாநில ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு தடை விதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெளிமாநில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சார்பில் கே.ஆர்.சுரேஷ்குமார் உள்ளிட்டோர் வக்கீல் சங்ராம் சிங் போன்ஸ்லே சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:- பிற மாநில பஸ்களை தமிழகத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்பட்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே வெளிமாநில ஆம்னி பஸ்களைய இயக்க கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை நேற்று நீதிபதிகள் பி வி நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிக்ள், வெளி மாநில ஆம்னி பஸ்கள் இயங்குவதை தடுக்க கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். மேலும், இந்த ரிட் மனு தொடர்பாக வரும் ஆகஸ்டு 12 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications