ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா.. இன்னும் சில நாட்களில்.. மத்திய அரசு திட்டம்! வெளியான முக்கிய தகவல்
டெல்லி: நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. அதன்படி 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவையும் தற்போதைய கூட்டத் தொடரிலேயே கொண்டு வர மத்திய அரசு தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்போது டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் அதானி விவகாரம், சம்பல் வன்முறை உள்ளிட்டவை காரணமாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.

மத்திய அரசுத் திட்டம்: அதேநேரம் இந்த குளிர்கால கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு பல்வேறு முக்கிய மசோதாக்களை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவையும் இந்த கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லோக்சபா மற்றும் அனைத்து மாநிலச் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதே இந்த சட்டத்தின் நோக்கமாகும்.
இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்து இருந்தது. அந்த குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மசோதாவுக்கு மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
விரிவான விவாதம்: இது தொடர்பாக விரிவான விவாதம் நடப்பதை உறுதி செய்யவும் ஒருமித்த கருத்தை எட்டவும் இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ள நிலையில், அதில் விரிவான விவாதம் நடக்கும்.
இது மிக முக்கிய மசோதாவாக இருக்கும் என்பதால் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து மாநிலங்களின் சபாநாயகர்கள், வல்லுநர்கள், துறை சார்ந்த நிபுணர்களையும் அழைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய மக்களிடம் இருந்தும் கருத்துக் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு நம்பிக்கை: இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள், அதன் பலன்கள் மற்றும் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தத் தேவையான நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் குறித்து விவாதத்தின் போது முழுமையாக ஆராயப்படும் எனத் தெரிகிறது. இதில் இருக்கும் சவால்கள் குறித்து விவாதிப்பதன் மூலம் இதில் ஒருமித்த கருத்தை அடைய முடியும் என்று மத்திய அரசு நம்புவதாகக் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் லோக்சபா மற்றும் பல்வேறு மாநிலச் சட்டசபைத் தேர்தல்கள் இப்போது தனித்தனியாக நடத்தப்படுகிறது. இதனால் அனைத்து ஆண்டுகளிலும் தேர்தல் இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கு அதிக செலவாகும் நிலையில், அதைக் குறைக்கவும் தேர்தல் காரணமாக மக்கள் நலப் பணிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவுமே இந்த மசோதாவை கொண்டு வருவதாக ஆளும் தரப்பில் கூறப்படுகிறது.
எப்போது: இதற்கான மசோதாவை இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேலை இந்த கூட்டத்தொடரில் அதற்கான வாய்ப்பு அமையாமல் போனால் அடுத்த கூட்டத்தொடரில் இதை நிச்சயம் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் இதை மிகக் கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications