அட, மறுபடியும் வெங்காயம் ரேட் கூடிப்போச்சே.. நாடு முழுக்க கிடுகிடு உயர்வு.. காரணம் என்ன?
டெல்லி: நாடு முழுக்க, வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த முறை மழை மற்றும் புயல் தாக்கம் இதற்கான காரணமாக கூறப்படுகிறது.
இயற்கை சீற்றத்தால் வெங்காய செடிகள் அழிவடைந்துள்ளதால், இல்லத்தரசிகளை வெங்காய விலை கண்ணீர் விட வைத்துள்ளது. எனவே, மக்கள் குறைந்த அளவுக்கான வெங்காயத்தை வாங்கி வருகிறார்கள்.

தற்போது, வெங்காய விலை மொத்த சந்தையில் கிலோவுக்கு, ரூ. 55 முதல் 60 வரையிலும், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூ .70 முதல் 90 வரையிலும் விற்கப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ஒன்றுக்கு, 90 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ரூ. 80 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
தற்போது கர்நாடகாவின் ஹூப்ளி, பெல்லாரி போன்றவற்றைதான் வெங்காய வருகைக்கு மொத்த நாடும் நம்பிக் கொண்டு உள்ளது. அங்கேயும் மழை காரணமாக வெங்காய விளைச்சல் குறைந்துள்ளது.
ஹூப்ளியைத் தவிர வேறு எங்கிருந்தும் புதிய வெங்காயம் வரவில்லை. நாசிக், குஜராத், மஹுவா, பாவ்நகர் ஆகியவற்றிலிருந்து வெங்காய வரத்து, வழக்கம்போல தொடங்கும் போது அடுத்த மாதம் முதல் விலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி மாதத்தில், பிப்ரவரி முதல் வாரத்தில், கைர்த்தால், ஆல்வார் மற்றும் சிகார் ஆகிய பகுதிகளில் இருந்தும் வெங்காயம் வரத் தொடங்கும்.
பூண்டு மொத்த சந்தையில் கிலோவுக்கு, 150-160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, சில்லறை விற்பனையில், ஒரு கிலோவுக்கு 180-200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மளமளவென உயர்ந்த வெங்காய விலை, கிலோவுக்கு ரூ.80 என்ற அளவை தொட்டது. சில வாரங்கள் பிறகுதான் அது குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications