பாஜகவை பகைத்துக் கொள்ளாத ஓபிஎஸ் மகன்.. பதவியேற்ற ஸ்டைலே வேறு!
Recommended Video
டெல்லி: அமைச்சர் பதவிக்காக காத்துக் கொண்டிருக்கும் தேனி எம்பி ஓபி ரவீந்திரநாத் குமார் பாஜகவை எந்தவகையிலும் பகைத்துக் கொள்ளாத நிலையில் பதவியேற்றார். பாஜக எம்பிக்களின் பாராட்டையும் பெற்றுவிட்டார்.
தேனி லோக்சபா தொகுதியின் வேட்பாளராக துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் அறிவிக்கப்பட்டவுடனேயே ஆட்டம் ஆரம்பித்தது. தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாவதற்கு முன்பே தேனி எம்பி ரவீந்திரநாத் குமார் என கோயில் கல்வெட்டில் அவரது ஆதரவாளர்கள் பதித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
அத்தோடு விடாமல் அமைச்சரவையில் இடம்பெறும் ஆசையில் ஒரு பத்திரிகையில் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத் குமார் என நோட்டீஸ் அடிக்கப்பட்டது. இதுவும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மகனுடன் முகாம்
அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் புதிய அமைச்சரவையில் ஓபிஎஸ் மகன் பெயர் இடம் பெறவில்லை. எனினும் விடாமல் டெல்லியில் ஓபிஎஸ்ஸும், அவரது மகனும் முகாமிட்டு வந்ததாக செய்திகள் கூறின.

பதவியேற்ற தமிழக எம்பிக்கள்
சரி புதிய அமைச்சரவை விரிவாக்கத்தின்போதாவது அமைச்சர் பதவி கிடைக்கும் என ஓபிஎஸ் மகன் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்றைய தினம் தமிழக எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

கொந்தளிப்பு
அப்போது திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொமதேக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்களில் சிலர் தமிழ் வாழ்க என கூறினர். இதற்கு பாஜக எம்பிக்கள் பதிலுக்கு பாரத் மாதா கி ஜே என கோஷமிட்டனர்.

பாஜக எம்பிக்கள்
இதைத் தொடர்ந்து அதிமுகவின் ஒன் அண்ட் ஒன்லி எம்பியான ரவீந்திரநாத் குமார் பதவியேற்க வந்தார். மிகவும் பதற்றத்துடன் காணப்பட்ட அவர் தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றார். பின்னர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வாழ்க, புரட்சித் தலைவி அம்மா வாழ்க, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என கூறினார். உடனே பாஜக எம்பிக்கள் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.

அதிருப்தி ஏற்படுத்தாததில் கவனம்
அமைச்சர் பதவிக்காக காத்துக் கொண்டிருக்கும்போது தமிழ் வாழ்க போன்ற கோஷங்களை முன் வைக்காமல் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் என கூறியதன் மூலம் பாஜகவினரை வெறுப்பேற்றக் கூடாது, அதிருப்தியடைய வைக்கக் கூடாது என்பதில் ஓபிஎஸ் மகன் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பது தெரிகிறது. பர்ஸ்ட் இம்ப்ரஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் என்பதற்கேற்ப முதல் நாளிலேயே பாஜக எம்பிக்களின் பாராட்டுகளையும் பெற்று விட்டார் ஓ.பி.ஆர்.












Click it and Unblock the Notifications