ஆபரேஷன் சிந்தூர்.. சோபியா குரேஷி, வியோமிகா சிங்குக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும்? தெரிஞ்சுக்கோங்க
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் தலைமை வகித்தது லெப்டினன்ட் கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர்தான் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இவர்களுக்கான பாதுகாப்பு எப்படி இருக்கும்? என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.
ஏற்கெனவே இதற்கு முன்னர் 2016 உரி, 2019 பாலக்கோட் தாக்குதலுக்கு பின்னர், தாக்குதலில் தலைமையேற்றவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இரண்டு வீராங்கனைகளுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.

குறிப்பாக இவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வீரர்கள் பாதுகாப்பு கொடுப்பார்கள். இவர்கள் ஆயுதம் ஏந்தியிருப்பார்கள். பொதுவாக ராணுவ புலனாய்வு, என்ஜி உள்ளிட்ட உயர் பாதுகாப்பு அடுக்கில் பணியாற்றியவர்கள் பாதுகாவலராக நியமிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் கையில் ஆயுதம் ஏந்தியிருப்பார்கள். இந்த பாதுகாப்பு 24 மணி நேரமும் இருக்கும்.
லெப்டினன்ட் கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா ஆகியோர் ராணுவ குடியிருப்பில்தான் வசிப்பார்கள் என்பதால், அங்கு இயல்பாகவே பாதுகாப்பு அதிகமாக இருக்கும். இந்த குடியிருப்புக்குள் பொதுமக்கள் உட்பட அந்நியர்கள் எவரும் உள்ளே நுழைய முடியாது. மீறி பார்க்க முயல்பவர்கள் பயோமெட்ரிக் உட்பட மூன்றடுக்கு பாதுகாப்பை தாண்டி போக வேண்டும்.
அதேபோல இரண்டு வீராங்கனைகளின் பயணங்கள் மிக குறைவானதாகவே இருக்கும். தவிர்க்க முடியாத பயணங்கள் ரகசியமானதாக இருக்கும்.
இந்த அதிகாரிகள் எந்த மண்டலத்திற்குள் பயணிக்கிறார்களோ, அந்த ராணுவ கமாண்ட் அல்லது மண்டல லெவல் தலைமை அலுவலகம் இவர்களுக்கான பாதுகாப்பையும், பயண திட்டத்தையும் உறுதி செய்யும்.
எல்லாவற்றையும்விட முக்கியமானது, இவர்கள் தொடர்ந்து உளவுத்துறை கண்காணிப்பில் இருப்பார்கள். இவர்களுக்கான மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் பற்றி ராணுவ உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வரும். மற்றொருபுறம் இந்த அதிகாரிகள் டிஜிட்டல் தளத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுவார்கள். ஏனெனில் சைபர் தாக்குதலுக்கான வாய்ப்புகள் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது இவர்கள் அனுப்பும் டிஜிட்டல் மெசேஜ்கள் அனைத்தும் என்கிரிப்ட் எனப்படும் பாதுகாப்பு முறையில்தான் அனுப்பப்படும்.
2016 உரி, 2019 பாலக்கோட் தாக்குதலில் தலைமை ஏற்ற அதிகாரிகளுக்கு இப்படித்தான் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications