கதிகலங்கிய பாகிஸ்தான்.. சத்தமின்றி இந்தியா கொடுத்த மரண அடி.. ஆபரேஷன் சிந்தூர் -10 மேஜர் பாயிண்டுகள்
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த 9 இடங்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்தத் தாக்குதல் தொடர்பாக 10 முக்கிய பாயிண்டுகளை நாம் பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் இந்தியா தாக்குதல் நடத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே நள்ளிரவு நேரத்தில் இறங்கி அடித்த இந்திய ராணுவம், 9 பகுதிகளில் குறிவைத்து விரிவான தாக்குதலை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

10 பாயிண்டுகள்
இந்தத் தாக்குதல் தொடர்பாக 10 முக்கிய பாயிண்டுகளை நாம் பார்க்கலாம்.
1. பாகிஸ்தானில் இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியதற்குப் பின்பு இந்திய ராணுவம் தனது ட்விட்டரில் வெறும் ஐந்தே வார்த்தைகளில் ஒரு போஸ்ட்டை பதிவிட்டது. இந்திய ராணுவம் தனது ட்விட்டரில், "நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த்!" என்று பதிவிட்டிருந்தது. மேலும், "ஸ்டிரைக் செய்ய ரெடியாக இருக்கிறோம்.. வெற்றி பெறவே பயிற்சி" என்ற தலைப்பில் ராணுவ பயிற்சியின் வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருந்தது.
2. மேலும், தாக்குதல் நடந்து சில நிமிடங்களில் மத்திய அரசும் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. பாகிஸ்தான் ராணுவ மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதை இந்தியா தெரிவித்தது. தீவிரவாத சைட்களை குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தீவிர ஆய்வுக்குப் பிறகு பொறுமையாகவே இந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிற்கு இந்தியாவின் மெசேஜ்
3. மேலும், அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகமும் தனியாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்குத் தொடர்பு இருப்பதாக நம்பகமான தகவல்கள் இருப்பதாக இந்தியத் தூதரகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.. உலக நாடுகளுக்கு இந்த அறிக்கை முக்கியமான மெசேஜாக இருக்கிறது.
4. மொத்தம் 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் கோட்டையான பஹாவல்பூர் உட்பட மொத்தம் ஒன்பது இடங்கள் குறிவைக்கப்பட்டன. லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகமான முரிட்கே (பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமான இடமாகக் கருதப்படுகிறது), குல்பூர், பிம்பர், சக் அம்ரு, பாக், கோட்லி, சியால்கோட் மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டன.
எந்த ஆயுதங்கள்
5. தொலைதூரம் ஊடுருவித் தாக்குதல் நடத்த வடிவமைக்கப்பட்ட SCALP குரூஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. மேலும்,வான்வழித் தாக்குதல்களுக்கு ஹாமர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
6. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி இந்தத் தாக்குதலை இரவு முழுவதும் கண்காணித்து வந்ததாகத் தெரிகிறது. ஒவ்வொரு பயங்கரவாதியையும் இந்தியா கண்டுபிடித்துத் தண்டிக்கும் எனப் பிரதமர் உறுதியளித்திருந்த நிலையில், அதைச் செய்தும் காட்டியுள்ளார்.
அத்துமீறும் பாகிஸ்தான்
7. தீவிரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, பூஞ்ச்-ரஜோரி பகுதியில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர்.. பாகிஸ்தான் 13வது நாளாகப் போர் நிறுத்தத்தை மீறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
8. இந்தியாவின் இந்த ஆபரேஷன் சிந்தூரை போர் நடவடிக்கை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறினார். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது. இருப்பினும், கூடுதலாக எந்தவொரு தகவலையும் பாகிஸ்தான் பகிரவில்லை.
எல்லை பகுதிகள்
9. இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக எல்லையில் உள்ள தர்மசாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் விமானச் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், இன்று ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து எந்த சிவில் விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.. காஷ்மீரின் சில பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
10. தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியா விளக்கமளித்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தத் தாக்குதலை இந்தியா சீக்கிரம் முடிக்க வேண்டும் என தெரிவித்தார். அதேநேரம் அவர் எந்தவொரு கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications