"சிந்தூர்" எதை அழிக்க நினைத்தனரோ அதே பெயரில்.. பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர்
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவத்தின் பதிலடி குறித்து பஹல்காம் தீவிரவாத தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் தங்களின் உணர்வுகளை பகிர்ந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி, சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.

அதன்படி நள்ளிரவு முதல் இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் நாட்டுக்குள் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஆகிய தீவிரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது.
பஹல்காம் தாக்குதலுக்கு கொடுக்கப்படும் இந்த பதிலடியை பலரும் வரவேற்று வருகின்றனர். இதுகுறித்து பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சந்தோஷ் ஜக்தலே என்பவரின் மகள் அஸ்வரி ஜக்தலே கூறுகையில், "ராணுவத்தின் பதிலடி தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்தமுறை மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வருகிறது. பிரதமர் மோடி சரியான முறையில் ரிவெஞ்ச் எடுத்துள்ளார். இதற்கு சிந்தூர் என்று பெயரிடப்பட்டது எங்கள் உணர்வுகளை பிரதிபலிக்கிறது. எங்கள் கண்ணீர் நிற்க போவதில்லை. சிந்தூர் என்பது திருமணத்தின் அடையாளம். தீவிரவாதிகள் அதை அழிக்க நினைத்தனர். தற்போது அதற்குண்டான பிரதிபலனை அனுபவிக்கிறார்கள்." என்றார்.
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவிவேதி என்பவரின் அப்பா சஞ்சய் திவிவேதி கூறுகையில், "அரசு மீது சாமானிய மக்கள் வைத்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நான் தொடர்ந்து செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது எங்கள் ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் நம்பிக்கையை ஒளிர வைத்துள்ளது.
பொது மக்களின் வலிகளை உணர்ந்து பதிலடி கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ராணுவத்துக்கு சல்யூட். அவர்களுக்கு எங்களின் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். பாகிஸ்தானில் வேரூன்றியுள்ள தீவிரவாதத்தை அழிப்பதற்காக நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலை மனதார வரவேற்கிறோம்." என்றார்.
சுபம் திவிவேதியின் உறவினர் மனோஜ், "பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்துள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி எங்கள் குழந்தையை இழந்த அந்தத் தருணத்தில் நாட்டில் புரட்சி வெடிக்கும் என்று தோன்றியது. தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க பிரதமர் நரேந்திர மோடி கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியாக நம்புகிறோம்." என்று கூறினார்.
சுபம் திவிவேதியின் மனைவி கூறுகையில், "சிந்தூர் ஆபரேஷன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக உள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ராணுவத்துக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆபரேஷனின் பெயர் மிகவும் உணர்வுபூர்வமாக உள்ளது. தீவிரவாதிகள் தங்கள் தாக்குதல் மூலமாக எந்த அடையாளத்தை அழித்தார்களோ, அதே பெயரில் தற்போது பதிலடி வாங்கி வருகிறார்கள்." என்றார்.
மேலும், எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் பிரதமர் மோடியை நம்பியிருந்தோம். எங்கள் நம்பிக்கையை அவர் காப்பாற்றியிருக்கிறார். என் கணவருக்கான உண்மையான அஞ்சலி இதுதான். அவர் எங்கே இருந்தாலும் அவரது ஆத்மா இன்று சாந்தி அடைந்திருக்கும்.












Click it and Unblock the Notifications