"ஆபரேஷன் சிந்தூர்" சொல்லி அடித்த இந்திய ராணுவம்.. ராகுல்காந்தி பெருமிதம்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் தங்களுடைய வரவேற்பைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி, சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 அப்பாவிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் அந்நாட்டு அதிகாரிகளே அரண்டு போயிருந்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் நாட்டுக்குள் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஆகிய தீவிரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது.
1972 ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில், இந்தியா போர் அல்லாமல் நடத்தியுள்ள மிகப்பெரிய தாக்குதல் இது என்று தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்த பதிலடி தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது. இது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் மட்டுமே. பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் இல்லை என்று இந்தியா கூறியிருந்தது.
ஆனாலும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அந்த நாடு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து காலை 10 மணியளவில் இந்திய ராணுவம் விளக்கமளிக்க உள்ளது. இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினர், நாட்டு மக்கள் வரவேற்பையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இந்திய ராணுவத்கை நினைத்து பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், "இந்திய ராணுவத்தை நினைத்து பெருமை கொள்கிறோம். ஜெய்ஹிந்த்" எனப் பதிவிட்டுள்ளார். இதேபோல, தமிழக முதல்வர் முக ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, பியூஷ் கோயல் உள்ளிட்டோரும் இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.













Click it and Unblock the Notifications