பெரிய வெற்றி.. அடுத்து இந்திய ராணுவம் என்ன செய்யும்? பாதுகாப்பு துறையில் சர்வதேச நடைமுறை இதுதான்
டெல்லி: பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் மீது இந்திய தாக்குதல் நடத்தியிருக்கிறது. தாக்குதல் வெற்றி அடைந்துள்ள நிலையில், இந்திய ராணுவம் அடுத்த கட்டமாக என்ன செய்யும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள பாதுகாப்பு படைகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு அடுத்து என்ன செய்வார்கள் என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.

கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது. இது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய வெற்றி. ஆனால் இந்த நடவடிக்கைக்கு பின்னர்தான் ராணுவம் மிக கவனமாக இருந்தது.
இதுபோன்ற பெரிய தாக்குதலுக்கு பிறகு ராணுவம் சில விஷயங்களை கடை பிடிக்கும். அமெரிக்க ராணுவமும் இதைத்தான் செய்தது. பின்லேடனை கொல்ல ஆபரேஷன் நெப்டியூன் ஸ்டார் எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் அமெரிக்க வீரர்கள் நேரடியாக களத்தில் இறங்கினார்கள். பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு, அவர் வசித்த இடத்திலிருந்து பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை ஆய்வு செய்வதன் மூலம் பயங்கரவாதிகளின் அடுத்த திட்டம் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரில் இப்படியான வாய்ப்பு இல்லை. காரணம் நம் ராணுவம் நேரடியாக களத்தில் இறங்கவில்லை. தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மட்டுமே கதையை முடித்துவிட்டது.
இரண்டாவது முக்கியமான விஷயம் ஆபரேஷனில் ஈடுபட்டவர்களை மீட்பதும், ஊடக கசிவுகளை தடுத்து நிறுத்துவதுமாகும். இதற்காக வெளியுறவுத்துறையுடன் ராணுவம் இணைந்து செயல்படும். இந்தியா இதற்கு முன்னர் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் வசம் பிடிபட்டார். அவரை மீட்டது இந்த பணிகளின் அடிப்படையில்தான். ஆனால் ஆபரேஷன் சிந்தூரில் நேரடியாக நம் வீரர்கள் ஈடுபடவில்லை் எனவே இந்த முறை இந்த செயல்பாடுகளுக்கு வேலையில்லை.
மூன்றாவது மிக முக்கியமான கட்டம். நாம் நடத்திய தாக்குதல் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது? உயிரிழப்புகள் என்ன? முக்கிய தலைகள் உருண்டதா? பலவீனமடைந்துள்ளார்களா? திரும்ப தாக்க வாய்ப்பு இருக்கிறதா? பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கான வாய்ப்பு எவ்வளவு இருக்கிறது என்று ஆய்வு செய்யப்படும்.
இந்திய ராணுவம் இந்த ஆய்வை முடித்திருக்கிறது. 60-70 பேர் வரை தாக்குதலில் உயிரிழந்திருப்பதாகவும் ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்பின் மூளையாக செயல்பட்டு வந்த மசூத் ஆசாத்தின் குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டிருப்பதையும் உறுதி செய்திருக்கிறது. அதேபோல, எதிர் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால், விடுப்பில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.
நான்காவது கட்டம் பாதுகாப்பை உறுதி செய்வது. எதிர் தாக்குதல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நிகழும் என்பதால், எல்லையில் பாதுகாப்பை ராணுவம் பலப்படுத்தும். இந்தியாவும் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அதாவது பாக் எல்லையை ஒட்டியுள்ள விமான நிலையங்கள் சில மூடப்பட்டிருக்கின்றன. 10 நாட்களுக்கு இவை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
5வது கட்டம் சட்ட சிக்கல்களை ஆய்வு செய்வது. எதிரி நாட்டிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் அது சட்ட சிக்கலை ஏற்படுத்தும். எனவே இதனை தீர்க்க சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் இந்த பிரச்சனை இல்லை. ஆனால் பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தை நாடும்போது இந்த சிக்கல் எழும். அப்போது வெளியுறவுத்துறையுடன் இணைந்து ராணுவம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
தாக்குதல் வெற்றியடைந்திருந்தால் அவர்களை கௌரவிப்பதுதான் இறுதி கட்டம். இந்திய ராணுவம் அதை செய்திருக்கிறது. தாக்குதலில் முன்னணியில் நின்ற லெப்டினன்ட் கர்னல் சோபியா குரேஷி மற்றும் வியோமிகா சிங் ஆகியோரை கௌரவப்படுத்தும் விதமாக செய்தியாளர் சந்திப்பை தலைமையேற்று நடத்த வைத்திருக்கிறது. இதன் பின்னர் இவர்களுக்கு ராணுவ விருதுகள் வழங்கப்படும்.
ஆக இதுதான் தாக்குதலுக்கு பின்னர் ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளாகும்.












Click it and Unblock the Notifications