"சிந்தூர்" கர்ஜித்த இந்தியா.. பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய 9 முக்கிய இடங்கள் எவை தெரியுமா?
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஆண்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டு 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின்கீழ், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய ராணுவம் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய 9 இடங்கள் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஆண்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.

இதைத்தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கீழ் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று பாதுகாப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கான உண்மையான நோக்கம் பயங்கரவாதத்தை ஒழிப்பதே என்றும், அண்டை நாட்டுடன் மோதலை அதிகரிப்பதற்கான நோக்கம் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, எல்லைக் கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்திய இடங்கள்:
1. ஜெய்ல் இ முகமது தீவிரவாத முகாம் செயல்பட்டு வந்த பகவல்பூரில் மார்க்கஸ் சுபான் அல்லா.
2. லஷ்கரே தொய்பா தீவிரவாத முகாம் செயல்பட்டு வந்த முரிட்கேவில் மார்கஸ் தைபா.
3. ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத முகாம் செயல்பட்டு வந்த சர்ஜாலில் உள்ள டெஹ்ரா கலன்.
4. சியால்கோட்டில் இந்தியன் முஜாஹிதீன் முகாம் செயல்பட்டு வந்த மெஹ்மூனா ஜோயா.
5. லஷ்கரே தொய்பா செயல்பட்டு வந்த பர்னாலாவின் மார்கஸ் அலே ஹடித்.
6. கோட்லி நகரத்தின் மார்க்கஸ் அப்பாஸ்
7. கோட்லி நகரத்தின் அருகே உள்ள மஸ்கார் ரஹீல் சாஹித்.
8. முஸாபராபாத் அருகே உள்ள ஷவாய் நல்லா முகாம்.
9. முஸாபராபாத் அருகே உள்ள சயேத்னா பிலால் முகாம்.
பாகிஸ்தானில் கோழைத்தனமாக தாக்குதல்களை எதிரிகள் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தப் போர் நடவடிக்கைக்கு தக்க பதிலடியை, சரியான இடத்தில் உரிய நேரத்தில் அளிக்கப்படும் என்றும், இந்தியாவின் தற்காலிக மகிழ்ச்சி நீடிக்காது. துக்கம் சூழப் போகிறது என்றும் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications