"ஏழைத்தாயின் மகன்" பிரதமராக இருப்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! லோக் சபாவில் உருகிய மோடி
டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்த பிரதமர் மோடி ஒரு கட்டத்தில் உருக்கமாகவும் பேசினார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வன்முறை தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையைத் தடுப்பதில் அம்மாநில அரசு தோல்வியடைந்துவிட்டதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

"இந்தியா" கூட்டணி எம்பிக்கள் மணிப்பூர் மாநிலத்திற்கு நேரடியாகச் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்து வந்தனர். இதற்கிடையே நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படாமலேயே இருந்தது. இதனால் எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து முடக்கி வந்தனர். இதற்கிடையே மணிப்பூர் மாநிலம் குறித்து விவாதிக்காத நிலையில், "இந்தியா" கூட்டணி எம்பிகள் இணைந்து பிரதமர் மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். கடந்த 3 நாட்களாக இது குறித்துத் தான் லோக்சபாவில் விவாதம் நடைபெற்றது.
இதற்கிடையே இன்று பிரதமர் மோடி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசினார். அப்போது காந்தி பெயரைக் காங்கிரஸ் தலைவர்கள் பயன்படுத்துவது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். நாட்டின் திட்டங்களைக் காங்கிரஸ் தலைவர்கள் அவர்களின் சொந்த நலன்களுக்காக பயன்படுத்தி வந்ததாகவும் சாடினார். மேலும், காங்கிரஸ் கட்சி என்பது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் என்றும் அவர் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஏழைத்தாயின் மகன் இப்போது பிரதமராக இருக்கிறேன்.. இதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. இது இந்தியா கூட்டணி இல்லை.. ஈகோ கூட்டணி... எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி அகங்காரம் கொண்ட கூட்டணி. இவர்களுக்கு 2024 தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
தற்போது வரை மன்னராட்சி மனநிலையில் தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அனுமனால் இலங்கை அழிக்கப்படவில்லை. ராவணனின் தலைக்கனத்தாலேயே இலங்கை அழிந்து போனது. இதன் காரணமாகவே 400 இடங்களில் இருந்த காங்கிரஸ் இப்போது 40 இடங்களுக்குக் குறுகிவிட்டது. இவர்களின் அகங்காரமே காங்கிரஸ் கூட்டணியை அழிக்கும்" என்று அவர் கடுமையாகச் சாடி பேசினார்.












Click it and Unblock the Notifications