ராஜ்யசபாவில் 'எம்புரான்' குறித்து விவாதிக்க மறுப்பு- கொந்தளிப்புடன் வெளியேறிய இடதுசாரி எம்பிக்கள்!
டெல்லி: நாடாளுமன்ற ராஜ்யசபாவில் சர்ச்சைக்குரிய எம்புரான் திரைப்படத்தின் மீதான வலதுசாரி அமைப்புகளின் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க கேரளா இடதுசாரி எம்பிக்கள் வலியுறுத்தினர். ஆனால் ராஜ்யசபாவில் எம்புரான் சினிமா குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இடதுசாரி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மோகன்லால், பிருத்விராஜ் நடித்துள்ள எம்புரான் சினிமா, பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டிருக்கிறது. எம்புரான் சினிமாவில் வட இந்தியாவை சேர்ந்த இந்த்துத்துவா கட்சியின் தலைவன் பிரதான வில்லனாக காட்டப்பட்டுள்ளார்; உலகையே உலுக்கிய 2002ம் ஆண்டு குஜராத் படுகொலைகளை நினைவூட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என விமர்சித்து இந்த படத்துக்கு எதிராக இந்துத்துவா அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

இதனையடுத்து எம்புரான் திரைப்படத்தில் 21 காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் வசனங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எம்புரான் சினிமாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
ஆனால் எம்புரான் திரைப்படத்துக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். எம்புரான் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளவை உண்மையைத்தான் பேசுகின்றன என்பது பினராயி விஜயன் உள்ளிட்டோரின் கருத்து. இந்த திரைப்படத்துக்கு எதிரான வலதுசாரிகளின் தாக்குதல், ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் நடவடிக்கை எனவும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் எம்புரான் திரைப்படம் மீதான இத்தகைய வலதுசாரிகளின் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கேரளா இடதுசாரி எம்பிக்கள் ராஜ்யசபாவில் வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி எம்பிக்களான, ரஹூம், ஜான் பிரிட்டாஸ், சந்தோஷ்குமார் உள்ளிட்டோர், ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் ராஜ்யசபாவில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications