நாடாளுமன்ற கூட்டம்: எம்பி திருச்சி சிவா உட்பட பல எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மானம்!
புதுடெல்லி: விலைவாசி உயர்வு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எம்.பி திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலர் மாநிலங்களவையில் நோட்டீஸ் கொடுத்தனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 2-ம் நாள் அமர்வு தொடங்கி இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.
அடுத்த மாதம் 12-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடர் காலையில் தொடங்கியதும் எதிர்க்கட்சியினர் கேஸ் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி கோஷத்தில் ஈடுபட்டனர்.

ஒத்திவைப்பு தீர்மானம்
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி மாணிக்கம் தாகூர் லோக் சபாவில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் நோட்டீஸ் கொடுத்தார். அத்தியாவசிய பொருட்கள் மீது 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதித்தது குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்தார்.

விலைவாசி உயர்வு
அதேபோல், ராஜ்ய சபாவில், சஸ்பென்சன் நோட்டீஸ் கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி இளமாறன் கரீம், மாநிலங்களவையின் 267-வது விதிகளின் கீழ் அலுவல் நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி விதித்தது குறித்து விவாதிக்க வெண்டும் என வலியுறுத்தினார்.

திருச்சி சிவா
திமுகவை சேர்ந்த திருச்சி சிவா எம்.பியும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வலியுறுத்தி ராஜ்யசபாவில் நோட்டீஸ் கொடுத்தார். பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து உள்ளது. எனவே இது குறித்து விவாதிக்க வலியுறுத்தி திருச்சி சிவா எம்.பி நோட்டீஸ் கொடுத்தார்.

குறைந்த பட்ச ஆதார விலை
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சதா எம்.பியும் ராஜ்யசபாவில், குறைந்த பட்ச ஆதார விலை குறித்த குழு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்தார். வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக அரசு அமைத்த குழு குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டம் குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி தீபிந்தர் சிங் ஹூடா நோட்டீஸ் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications