விலைவாசி உயர்வு, பணவீக்கம்.. நாடாளுமன்றத்தை 3-வது நாளாக இன்றும் முடக்கிய எதிர்க்கட்சிகள்!
டெல்லி: விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் முழக்கம் ஏற்பட்டதால் இரு சபைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. அப்போது நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடைபெற்றது.

பின்னர் சபை நடவடிக்கைகளின் முதல் நாளிலும் ஜிஎஸ்டி வரி உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகளை முன்வைத்து நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகளுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்குள்ளும் இரு சபைகளிலும் இதே பிரச்சனையை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர். இதனால் நாடாளுமன்ற இரு சபைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் 2-வது நாள் நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகளை விவாதிக்க கோரி இருசபைகளிலும் முற்பகல் 11 மணிக்கு சபைகள் தொடங்கிய உடன் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் முதலில் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன. பிற்பகலில் சபைகள் கூடியதும் அமளியும் தொடர்ந்தது. இதனால் இரு சபைகளின் நடவடிக்கைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் 3-வது நாள் நடவடிக்கைகள் முற்பகல் 11 மணிக்கு தொடங்கியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் சபையை நடைபெற விடாமல் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு சபைகளின் நடவடிக்கைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications