காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு.. எங்கள் அரசு கட்டுக்குள் வைத்து இருக்கிறது.. பிரதமர் மோடி
டெல்லி: காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு அதிகமாக இருந்தது என்றும், பாஜக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது என்றும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து உரையாற்றும் போது பிரதமர் மோடி கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். 55 கோடி மக்களின் சுகாதார நலன் பேணப்பட்டு இருக்கிறது. சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க வங்கிக்கடன் திட்டம் அமலாகியுள்ளது. நாட்டின் எல்லைப்பகுதி மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்கே பாஜக அரசு முன்னுரிமை அளிக்கும். ஏழைகளின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி.
பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். அப்போது அடுத்த 1000 ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு அஸ்திவாரம் இடும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி லோக்சபா தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் கட்டாயம் வெற்றி பெறும். இதில் பாஜக மட்டும் 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். பெண்களுக்கு முழு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் வந்துவிட்டது.
எல்லா குடும்பத்திலும் பெண்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. 3 கோடி பெண்களை பாஜக அரசு லட்சாதிபதிகளாக உருவாக்கியுள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பீகாரில் பட்டியில் இன மக்களுக்காக போராடிய காங்கிரஸ் அரசு ஓபிசி தலைவர்களை ஏமாற்றியுள்ளது. தேசிய ஆலோசனைக்குழுவில் காங்கிரஸ் கட்சியில் எத்தனை பேர் ஓபிசி பிரிவினர் இருந்தனர்?
அழிவுப்பாதையை நோக்கி காங்கிரஸ் செல்கிறது. முன்பு காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு அதிகமாக இருந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications