ரோட்டை விரிவுபடுத்தப்போவதாக அறிவித்த மோடி.. எங்களை லேசா நினைக்காதீங்க.. கொந்தளிக்கும் நேபாளம்!
டெல்லி: உத்தரகண்ட்டில் மத்திய அரசு சாலை விரிவாக்க பணியை அறிவித்துள்ள நிலையில், இதற்கு நேபாள நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தியாவில் உத்தரகண்ட் நேபாளம் எல்லை அருகே அமைந்துள்ள லிபுலேக் கணவாய். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கணவாய் பகுதியின் வழியாகத் தான் சீன வணிகர்கள் இந்தியாவுக்குள் வந்தார்கள்.
தற்போது இந்தியா- நேபாள எல்லையில் சீனாவுக்கு மிக அருகில் அமைந்துள்ளது இந்த லிபுலேக் கணவாய். எனவே, அரசியல் ரீதியாக மிக முக்கிய இடமாக இது மாறியுள்ளது.

சர்ச்சை
இந்த லிபுலேக் கணவாய் பகுதிக்கான சாலையை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. நேபாளத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் இந்தியா செயல்படக் கூடாது என அந்நாட்டின் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளது. நேபாளம், சீனா நாடுகளுக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி பகுதிகள் தங்களுக்குச் சொந்தமானது என்று நேபாளம் நீண்ட காலமாக உரிமை கோருகிறது. சமீபத்தில் இந்த பகுதிகளை இணைத்து வரைபடத்தையும் அந்நாட்டு அரசு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி
சாலை விரிவாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் அறிவித்திருந்தார். கடந்த டிசம்பர் 30ஆம் தேதி ஹல்த்வானியில் பேசிய பிரதமர் மோடி, "அனைத்து விதமான வானிலை சமயத்திலும் பயன்படுத்தக்கூடிய வகையில் தனக்பூர்- பித்தோராகர் பகுதியில் சாலையை ஏற்படுத்தி வருகிறோம். இது தவிர லிபுலேக் வரை இருக்கும் சாலைகளை விரிவாக்கம் செய்யவுள்ளோம்" என அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. இருப்பினும், கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான நேபாளி காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முக்கிய ஆளும் கட்சி
இந்தியாவின் முடிவு ஆட்சேபனைக்குரியது என்று நேபாளி காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும், அப்பகுதியிலிருந்து இந்தியா தனது படைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், "லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் கலாபானி ஆகியவை நேபாளப் பகுதிகள் என்பதில் நேபாளி காங்கிரஸ் தெளிவாக உள்ளது. எனவே இந்த பகுதிகளைப் பயன்படுத்தும் உரிமை நேபாளத்திற்கு உள்ளது. கலாபானியில் உள்ள இந்தியப் படைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா விளக்கம்
இந்தியா -நேபாளம் -சீனா எல்லையில் அமைந்துள்ள லிபுலேக் கணவாய்க்கு சாலை அமைக்கும் இந்த விவகாரம் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான மோதலை ஏற்படுத்தியுள்ளது. அங்கு புதிய சாலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை என்றும் ஏற்கனவே கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் செல்ல யாத்ரீகர்கள் பயன்படுத்தும் சாலையை மட்டும் விரிவாக்கம் செய்வதாக இந்தியா கூறுகிறது. இது பக்தர்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் வியாபாரிகளின் வசதிக்காக மேற்கொள்ளப்படுவதாக அரசு தெரிவிக்கிறது. உத்தரகண்ட்டில் உள்ள லிபுலேக் மற்றும் காலாபானி பகுதியை இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள போதிலும் அதை நேபாளம் உரிமை கோருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்க மறுப்பு
இது தொடர்பாக மற்றொரு ஆளும் கட்சியான சிபிஎன் (யுனிஃபைட் சோசலிஸ்ட்) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேபாள அரசுடன் ஆலோசிக்காமல் இங்கு பணிகளைச் செய்வது முற்றிலும் சட்டவிரோதமானது, இது நேபாளத்தின் தேசிய இறையாண்மையை மீறுவதாக அமையும். இந்த பகுதிகளின் நேபாளத்திற்குச் சொந்தமானவை என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும் எனவே நாட்டின் இறையாண்மையைக் காக்க நேபாள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி
நேபாள நாட்டின் ஆளும்கட்சிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளும் இந்தியாவின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. சர்ச்சைக்குரிய பகுதியில் இந்தியா எந்தவொரு கட்டுமானத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் இது தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமுகமான முடிவை எடுக்க வேண்டும் எனப் பிரத்தியேக எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட்-யுஎம்எல் வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications