தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான்! பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிப்பு
ஸ்ரீநகர்: இந்தியாவின் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மறு உத்தரவு வரும் வரை கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் நிலவி வரும் அசாதாரண சூழலுக்கு இது உதாரணமாக பார்க்கப்படுகிறது.

நேற்று இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் வான் வழி தாக்குதலை தொடங்கியிருந்தது. நவ்ஷேரா பகுதியில், பாகிஸ்தானின் இரண்டு ட்ரோன்கள் இந்திய இராணுவத்தால் வீழ்த்தப்பட்டன. இந்த தடுப்பு நடவடிக்கையில் நமக்கு பெரிதும் கை கொடுத்தது 'ஆகாஷ்' எனப்படும் இந்திய தயாரிப்பு ஏர் டிபென்ஸ் மிசைல் அமைப்புதான். இன்றும் பாகிஸ்தான் இதே பாணி தாக்குதலை கையில் எடுத்திருக்கும் நிலையில், இந்திய ராணுவம் பதிலடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
மறுபுறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் லடாக்கில் உள்ள கல்வி நிறுவனங்களை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதாக பிடிஐ செய்தி ஊடகம் கூறியிருக்கிறது. தொடக்கத்தில் கல்வி நிறுவனங்கள் சனிக்கிழமை வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நிலைமை மோசமானதையடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீ கங்காநகர், பிகானீர், ஜோத்பூர், ஜெய்சால்மர் மற்றும் பார்மர் மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் தவிர, ஜோத்பூரில் உள்ள அனைத்து கல்லூரிகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்திலும் அடுத்த மூன்று நாட்களுக்கு பள்ளி கல்லூரிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மே.9, 10 மற்றும் 12ம் தேதிகளில் தேர்வுகள் நடைபெற இருந்தன. இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.
அதேநேரம் நாடு முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை யுஜிசி மறுத்திருக்கிறது. போலியான, உறுதி செய்யப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் பல்கலைக்கழக மாணியக் குழு கேட்டுக்கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications