பட்டும் திருந்தாத பாகிஸ்தான்.. எல்லையில் அத்துமீறி தாக்குதல்.. இந்திய வீரர் வீரமரணம்!
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியாக துப்பாக்கி சூடு மற்றும் ஷெல் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை இந்திய ராணுவம் திறம்பட முறியடித்து வரும் நிலையில், இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல் நாட்டையே உலுக்கியது.

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்தியா தக்க பதிலடி கொடுக்க காத்துக்கொண்டு இருந்தது. இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க அரசும், ஒட்டுமொத்த நாடும் உறுதிபூண்டது. அதற்கான ஏற்பாடுகளை கடந்த 2 வாரங்களாக மத்திய அரசு திட்டமிட்டது. மேலும் இந்த கொடூர தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் ஆதரவு இருப்பதை விளக்கி உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன. பாகிஸ்தானுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகளாக அந்த நாட்டினருக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானுடனான இறக்குமதி-வர்த்தகம் ரத்து, விமானங்களுக்கு இந்திய வான்பகுதி மூடல் என ஏராளமான அதிரடி நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டது.
இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதற்கிடையே, நேற்று நள்ளிரவு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியது.
இதனால் அரண்டு போன பாகிஸ்தான் தனது அத்துமீறிய தாக்குதலை தீவிரப்படுத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் சளைக்காமல் பதிலடி கொடுத்தது. இதற்கிடையே, பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர் தினேஷ் குமார் என்பவர் வீரமரணம் அடைந்துள்ளார். இந்த தகவலை ராணுவம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications