நீங்கதான் முடக்குவீங்களா? நாங்களும் களமிறங்குவோம்- ராகுலை முன்வைத்து நாடாளுமன்றத்தில் பாஜக பதிலடி!
ராகுல் காந்தி விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகளை மடக்கியது பாஜக.
டெல்லி: பொதுவாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கித்தான் பார்த்திருப்போம்.. இன்று நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குவதற்கு வகை செய்யும் வகையில் ராகுல் காந்தி விவகாரத்தை கையில் எடுத்து அதகளப்படுத்தியது மத்திய அரசு.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வில், அதானி குழும விவகாரங்களை முன்வைத்து இரு சபைகளையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வந்தன.

இந்த முறை எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி தரும் வகையில் வியூகம் வகுத்து செயல்பட்டது மத்திய அரசு. இன்று லோக்சபா காலையில் தொடங்கியதுமே, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் எழுந்து, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் லண்டன் பேச்சுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். மேலும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்; ராகுல் காந்தியை அனைவரும் கண்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதேபோல ராஜ்யசபாவிலும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ராகுல் காந்திக்கு எதிராக கொந்தளித்தார்.
அதாவது இந்தியாவில் அரசுக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்புகள் தாக்குதலுக்குள்ளாகின்றன. இதற்கு எதிராக குரல் கொடுக்கத்தான் ஒற்றுமை யாத்திரை நடத்தப்பட்டது. இந்தியாவின் நாடாளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்துமே தாக்கப்படுகின்றன; ஒடுக்கப்படுகின்றன. இதனால் மக்களின் குரலை வெளிப்படுத்துவதில் நெருக்கடி உருவாகி இருக்கிறது என லண்டனில் பேசியிருந்தார் ராகுல் காந்தி. இந்தப் பேச்சு இந்தியாவின் மாண்பை, நாடாளுமன்றத்தை அவமதிக்கிறது என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. இதனால்தான் பிரதமர் மோடியும் ஏற்கனவே ராகுல் காந்தியை கண்டித்திருந்தார்.

இன்று நாடாளுமன்ற இரு சபைகள் கூடிய உடனே மத்திய அமைச்சர்களும் பாஜக எம்பிக்களும் ராகுல் விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சிகளை திக்கு முக்காட வைத்தனர். மத்திய அரசின் இந்த அதிரடிக்கு பதில் தரும் வகையில் ,அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். பொதுவாக எதிர்க்கட்சி எம்பிக்கள்தான் மத்திய அரசுக்கு நெருக்கடி தருவர்; இம்முறை மத்திய அரசு, எதிர்க்கட்சிகளுக்கு முன்னதாகவே முந்திக் கொண்டது. இதுதான் டெல்லி அரசியலில் இன்றைய பேசுபொருளாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications