பொழுது போக்க ஏழைகளின் குடிசைகளுக்கு சென்று போட்டோ எடுக்கும் ராகுல் காந்தி.. லோக்சபாவில் மோடி கிண்டல்
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, தங்களது பொழுது போக்குக்காக ஏழைகளின் குடிசைகளுக்கு சென்று போட்டோ எடுப்பவர்களுக்கு (ராகுல் காந்தி) ஏழைகள் குறித்து பேசும் ஜனாதிபதி உரை சலிப்பூட்டக் கூடியதாகவே இருக்கும் என்று விமர்சித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இதனையடுத்து பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

லோக்சபாவில் நேற்று முதல் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதத்தில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் உற்பத்தித் துறையில் சரிவு, சீனாவின் அனைத்து துறை முன்னேற்றம், தேர்தல் ஆணைய முறைகேடு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை, அரசியல் சாசன சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டினார்.
திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, தமிழ்நாட்டு ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்தார். மேலும் அப்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், ஒன்றிய அரசின் நிர்வாக திட்டமிடலுக்காகவும் மக்கள் தொகையை இந்திய அளவில் தென் மாநிலங்களே வெகுவாக குறைத்துக்காட்டி சாதித்தது. ஆனால் இதனையே காரணமாக காட்டி எங்கள் அதிகாரத்தை பறிக்க நினைப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே, மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு அநீதியானது. அதனால் தான் நாங்கள் அதனை எதிர்க்கிறோம் என்றும் கனிமொழி எம்பி பேசினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி, சிபிஎம் எம்பி மதுரை சு.வெங்கடேசன் உள்ளிட்டோரும் ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினர். திருமாவளவன் பேசுகையில், தலித்- சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை நிதி ஒதுக்கீடு குறைப்பு குறித்து கேள்வி எழுப்பினார். அதேபோல சு.வெங்கடேசன் எம்பி பேசுகையில், உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மட்டும் 5 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள்; தமிழ்நாட்டின் கோவை- மதுரைக்கு எங்கே ரயில் திட்டம்? என கேள்வி எழுப்பி இருந்தார்.
லோக்சபாவில் இன்று 2-வது நாளாக விவாதம் நடைபெற்றது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இன்று இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசினர்.
இதனையடுத்து லோக்சபாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு 14-வது முறையாக பதிலளிக்கும் வாய்ப்பை தந்த நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். நாம் 2025-ம் ஆண்டில் இருக்கிறோம். 21-ம் நூற்றாண்டின் 25% பகுதியை கடந்துவிட்டோம். ஜனாதிபதி உரையை வரிக்கு வரி படித்துப் பார்த்தால் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை மற்றும் ஊக்கம் தரக் கூடியதாக இருக்கும்.
25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். பாஜக ஆட்சியில் 4 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தந்துள்ளோம். அதேபோல 12 கோடி கழிவறைகளை கட்டித் தந்துள்ளோம். நாங்கள் பொய்யான முழக்கங்களை எழுப்பவில்லை; உண்மையான வளர்ச்சியை மக்களுக்கு கொடுத்திருக்கிறோம். ஏழைகளின் குடிசைகளுக்கு சென்று பொழுது போக்குக்காக போட்டோ எடுக்கிறவர்களுக்கு ஏழைகளப் பற்றிய ஜனாதிபதி உரை சலிப்பூட்டுவதாகவே இருக்கும் (ராகுல் காந்தியை குறிப்பிட்டு விமர்சனம்) என்றார்.












Click it and Unblock the Notifications