மத்திய அரசு விசாரணை ஏஜென்சிகளுக்கு கண்டனம்: நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா அணி எம்பிக்கள் போராட்டம்!
டெல்லி: மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகளைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் 'இந்தியா' கூட்டணி எம்பிக்கள் இன்று கண்டனப் போராட்டம் நடத்தினர். அரசியல் ஆதாயத்துக்காக மத்திய அரசு விசாரணை ஏஜென்சிகளை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி இந்தியா கூட்டணி எம்பிக்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர். அப்போது நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
18-வது லோக்சபாவின் முதல் கூட்டம் கடந்த 24-ந் தேதி தொடங்கியது. ராஜ்யசபா கடநத 27-ந் தேதி தொடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நீட் தேர்வு முறைகேடுகளை எழுப்பி விவாதிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா இரு சபைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகளை அரசியல் ஆதாயத்துக்காக மத்திய அரசு பயன்படுத்துவதாக கண்டனம் தெரிவித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைதக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, நீட் தேர்வு என்பதே சமூகத்துக்கு எதிரானது. நீட் தேர்வை தொடக்கம் முதலே தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. ஒரு மாணவர் பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட்ட பின்னர் மீண்டும் ஒரு தேர்வு எதற்கு என்பதுதான் எங்கள் கேள்வி. தற்போது வட இந்திய மாநிலங்களில் நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் அம்பலமாகி இருக்கின்றன. நீட் என்பதன் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கியதுதான் திமுக என்றார்.
உத்தவ் தாக்கரே சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது கெஜ்ரிவாலை கைது செய்ய காரணமே இல்லை என்றது. இப்போது ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றமும் ஹேமந்த் சோரன் கைதுக்கு காரணமே இல்லை என்கிறது. ஆகையால்தான் மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகளை மத்திய அரசு அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டுகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications