ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் நாட்டுக்கு பெரும் ஆபத்தானது.. ராஜ்யசபாவில் மல்லிகார்ஜூன கார்கே ஆவேசம்!
டெல்லி: ஆர்.எஸ்.எஸ்.-ன் சித்தாந்தம் நாட்டுக்கு பெரும் ஆபத்தானது என ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக விமர்சித்தார். இதற்கு ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பிரதமர் மோடி மணிப்பூர் மக்களை நேரில் சென்று சந்திக்காதது, நீட் தேர்வு மோசடிகள் ஆகியவற்றையும் மல்லிகார்ஜூன கார்கே காட்டமாக விமர்சித்தார்.
ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள் பாஜகவின் அகம்பாவத்தை தகர்த்து எறிந்துவிட்டது. லோக்சபா தேர்தலானது அரசியல் சாசனமும் மக்கள் முடிவும் மகத்தானது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் கடந்த ஓராண்டாக பற்றி எரிகிறது. ஆனால் பிரதமர் மோடி வெற்று முழக்கங்களைத்தான் முன்வைத்து வருகிறார். இதுவரை மணிப்பூர் மக்களை நேரில் சென்று சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறவே இல்லை. லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது நாட்டை பிளவுபடுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசினார். நாட்டின் பிரதமராக பதவி வகித்த யாருமே அப்படியான பேச்சுகளை பேசியதும் இல்லை.
அக்னிபாத் திட்டம்: அக்னிபாத் திட்டம் என்ற துக்ளக் திட்டமானது நாட்டின் இளைஞர்களை மிக கடுமையாக பாதித்திருக்கிறது. எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் கொண்டுவரப்பட்ட அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். ஒரு அபாயம்: நாட்டின் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவிகளை, பேராசிரியர் பதவிகளை ஆர்.எஸ்.எஸ். ஆக்கிரமித்திருக்கிறது. நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களை என்சிஇஆர்டி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பிடியில் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் இந்த நாட்டுக்கு பெரும் அபாயத்தை விளைவிக்கக் கூடியது.
நீட் தேர்வு முறைகேடுகள்: நீட் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் மத்திய அரசு நடத்தும் பொதுத் தேர்வுகளில் 70 வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகி இருக்கிறது. வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகவில்லை என முதலில் மத்திய அரசு மறுத்தது. அதன் பின்னர் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகவும் ஒப்புக் கொண்டது மத்திய அரசு.
எதிர்க்கட்சிகள் மீது அடக்குமுறை: அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என ஜனாதிபதி தமது உரையில் தெரிவித்திருந்தார். ஆனால் அது வெறும் பேச்சளவில்தான்.. நடைமுறையில் இல்லை. எதிர்க்கட்சிகளை அடக்குவதற்காக, எதிர்க்கட்சிகளை செயல்படவிடாமல் முடக்குவதற்காகவே மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அரசியல் சாசனம்: லோக்சபா தேர்தலானது அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. பாஜகதான் அரசியல் சாசனத்தை திருத்துவோம் என்றது. பிரச்சனைகள் வரும் போகும்.. அரசியல் சாசனம்தான் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துவிட்டன. இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சிகளையே மக்கள் ஆதரித்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் காலம் காலமாக இருந்து வரும் தலைவர்கள் சிலைகள் வேறு இடத்துக்கு அகற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் நடத்தப்படவே இல்லை. இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
ஜக்தீப் தன்கர் பதில்: ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்து மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்த போது ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் குறுக்கிட்டு தேசத்தின் வளர்ச்சிக்காக அந்த இயக்கத்தின் தலைவர்கள் பாடுபடுகின்றனர் என்றார். அதேபோல தலைவர்கள் சிலைகள் புதிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளதை எம்பிக்கள் அனைவரும் சென்று பார்க்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications