எதிர்க்கட்சிகள் போர்க்கொடி! மணிப்பூர் வன்முறையை விவாதிக்க மறுப்பு! மொத்தமாக முடங்கிய நாடாளுமன்றம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் மணிப்பூர் வன்முறை பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் கூறினர். மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சமாதானம் செய்தும் அவர்கள் கேட்காததால் இரு சபைகளும் முழுவதுமாக முடங்கியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி(இன்று) தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார். அதன்படி இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தொடர் மொத்தம் 17 அமர்வுகளாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அமைதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடத்தும் வகையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தி்ல 30க்கும் அதிகமான கட்சிகளை சேர்ந்த 44 தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மணிப்பூர் வன்முறை பற்றியும், விலை வாசி உயர்வு, ஆளுநர்களின் செயல்பாடு, மத்திய விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இந்நிலையில் தான் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது.
கூட்டத்தில் தலைநகர் டெல்லி அதிகாரம் தொடர்பான அவசர சட்ட மசோதா, வன பாதுகாப்பு திருத்த மசோதா, தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா என சுமார் 32 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசோதாக்கள் 2 சபைகளிலும் நிறைவேற்றப்படும் நிலையில் சட்டமாக இயற்றப்பட உள்ளது.
இதற்கிடையே தான் இன்றைய கூட்டத்தொடரில் மக்கள் பிரச்சனைகளை கூறி விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதாவது கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் மணிப்பூர் வன்முறை நடந்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அதுபற்றி எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளார். இதனால் இந்த விஷயத்தில் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
மேலும் ஒடிசா ரயில் விபத்து, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளின் செயல்பாடு பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் திமுக சார்பில் ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெற வேண்டும் எனவும், டெல்லி ஆம்ஆத்மி சார்பில் டெல்லி சட்ட திருத்த மசோதாவை நிறுத்தி வைக்கவும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொங்கின. மக்களவைக்கு சபாநாயகர் ஓம்பிர்லா தலைமை வகித்தார். மாநிலங்களைக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தலைமை வகித்தார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் முதல் கட்டமாக மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த இரு சபைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பிறகு மதியம் 12 மணிக்கு சபைகள் தொடங்கியது. நாடாளுமன்ற ஒத்திவைப்பு நோட்டீசின் கீழ் சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் வன்முறை பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் கூறினர். இதையடுத்து மக்களவை, மாநிலங்களை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து 2 மணிக்கு மீண்டும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களை கூடின.
அப்போதும் இரு சபைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு எதிரான செயல்கள் குறித்து விவாதிக்க கூறினர். ஆனால் மக்களவையிலும், மாநிலங்களையும் அனுமதி வழங்கவில்லை. இந்த வேளையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‛‛மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். மணிப்பூரில் நடப்பது ஒரு முக்கியமான பிரச்சினை. மேலும் அதுதொடர்பான விவாதத்திற்கு உள்துறை அமைச்சர் விரிவாக பதிலளிப்பார். விவாத தேதியை சபாநாயகர் முடிவு செய்யட்டும்'' என்றார்.
ஆனால் எதிர்க்கட்சியினர் இன்றே விவாதிக்க வேண்டும் என கூறினர். இதனால் வேறு வழியின்றி மக்களவை மற்றும் மாநிலங்களவை நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி நாளை காலை 11 மணிக்கு மீண்டும் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் கூட உள்ளது. நாளையும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க போர்க்கொடி உயர்த்துவார்கள் என்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications