நாடாளுமன்ற தாக்குதல்.. கர்நாடகா முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகன் நள்ளிரவில் கைது.. என்ன நடந்தது
டெல்லி: கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் கர்நாடகாவில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை அத்துமீறி நுழைந்து சிலர், ஸ்பிரே தாக்குதல் நடத்தினர். இரண்டு பேர் லோக்சபாவில் நுழைந்து சிலர் புகை குப்பிகளை வீசி ரகளை செய்தனர். அப்போது வளாகத்திலும் சிலர் பிரச்சினையில் ஈடுபட்டனர்.

கடந்த 2001 டிசம்பர் 13இல் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் அரங்கேறிய நிலையில், அதே நாளில் இந்தச் சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல சிலர் தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஏழு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகியோர் தான் லோக்சபாவுக்குள் புகை வரும் குப்பிகளை வீசினர். அவர்களிடம் தான் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே இந்த நாடாளுமன்ற ஸ்பிரே தாக்குதல் விவகாரத்தில் ஓய்வுபெற்ற கர்நாடக காவல்துறை அதிகாரியின் மகன் ஒருவரை டெல்லி போலீசார் நேற்றிரவு பாகல்கோட்டில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்தனர், பொறியாளரான அவரை டெல்லிக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர். அவரது பெயர் சாய்கிருஷ்ணா ஜகாலி என்று கூறப்படுகிறது.
லோக்சபாவில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட இரண்டு பேரில் ஒருவரான மனோரஞ்சனின் நண்பர் தான் இந்த சாய்கிருஷ்ணா ஜகாலி என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் மனோரஞ்சனும் ஒருவர்.. அவர் மீது இப்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், உபா சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மனோரஞ்சன் உடன் பெங்களூரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தவர் தான் இப்போது கைது செய்யப்பட்டுள்ள சாய்கிருஷ்ணா. மனோரஞ்சனிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சாய்கிருஷ்ணாவை கைது செய்து அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்ததாகத் தெரிகிறது.
பொறியாளரான சாய்கிருஷ்ணா தனது பாகல்கோட்டை வீட்டில் வேலை பார்த்து வந்தார். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அவரது சகோதரி ஸ்பாண்டா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "டெல்லி போலீஸ் இங்கே வந்தது உண்மைதான்.. என் சகோதரனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளோம். சாய்கிருஷ்ணா எந்த தவறும் செய்யவில்லை. அவரும் மனோரஞ்சனும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். இதனால் விசாரணை நடத்துகிறார்கள் என நினைக்கிறேன். ஆனால், எனது சகோதரர் மீது தவறு இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications