மறக்குமா நெஞ்சம்.. பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடை! இன்று புதிய நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம்
டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு எம்பிக்கள் பிரியாவிடை கொடுத்த நிலையில் இன்று புதிய கட்டிடத்தில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தை கூட்ட இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் திடீரென சிறப்புக் கூட்டத் தொடருக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்ட நிலையில், அதுபற்றியும் இதில் விவாதிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின. அதேபோல் ஜி 20 நாடுகள் மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளித்த விருந்துக்கான அழைப்பிதழில், பாரத குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டு இருந்ததை குறிப்பிட்டு, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நாட்டின் பெயர் பாரத் என மாற்றப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகின.
இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கியது. செப்டம்பர் 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ள இந்த மழைக்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்து முதல் நாள் அமர்வில் விவாதிக்கப்பட உள்ளது என கடந்த 13 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால சிறப்புகள், முடிவுகளை, நிகழ்வுகளை சுட்டிக்காட்டி வரலாற்றை பகிர்ந்தார். அவரை தொடர்ந்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாற்றை குறிப்பிட்டு பேசினார்கள்.
அதை தொடர்ந்து மாலை நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி முடிவு செய்யப்பட்டதாகவும், இந்த சிறப்புக் கூட்டத்தொடரிலேயே அந்த மசோதா மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
நேற்று நாடாளுமன்ற பழைய கட்டிடத்தில் கடைசியாக அவை நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் அதற்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு எம்.பிக்கள் புறப்பட்டனர். இன்றைய நாடாளுமன்ற சிறப்புக் கூட்ட நிகழ்வு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த மே 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த நாடாளுமன்றத்தில் கடந்த 1947 ஆம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீனத்தால் பயன்படுத்தப்பட்ட செங்கோல் வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் ஆதீனங்களை அழைத்து பூஜைகளை நடத்தி புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டது. பழைய நாடாளுமன்ற கட்டிடம் நாட்டின் வரலாற்றை தாங்கி நிற்கும் சின்னமாக இருக்கிறது.
சுதந்திரத்திற்கு முன் 1921 ஆம் ஆண்டில் தொடங்கிய பழைய நாடாளுமன்றத்தின் கட்டுமானம் 6 ஆண்டுகள் கழித்து 1927 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. இம்பீரியல் ஆட்சி கவுன்சில் இயங்கிய இக்கட்டிடம் அப்போது இம்பீரியல் பில்டிங் என்று அழைக்கப்பட்டது. அந்த காலத்திலேயே 8.30 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பழைய நாடாளுமன்றம் 70 அடி உயரம், 560 அடி அகலம் கொண்ட இந்த கட்டிடத்தில் 144 பிரமாண்ட துாண்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications