12 எம்பிக்கள் சஸ்பெண்ட்.. அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்.. நாடாளுமன்றத்தில் இன்று என்ன நடந்தது?
டெல்லி: 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் இன்று இரண்டு அவையிலும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதன் பின்னர் அமளிக்கு பின் அணை பாதுகாப்பு மசோதா மிக நீண்ட விவாதத்துக்குப் பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் ராஜ்யசபாவில் இன்று நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து அடுத்தடுத்து அவையில் அமளி ஏற்பட்டு வருகிறது. முதல் நாள் வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவையில் பெரிய களேபரம் ஏற்பட்டது.
3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்
விவாதம் நடத்தாமல் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டதால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதை தொடர்ந்து நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதற்காக இந்த கூட்டத்தொடரில் 12 ராஜ்ய சபா எம்பிக்கள் ராஜ்ய சபா சபாநாயகர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மூலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
12 எம்பிக்கள் சஸ்பெண்ட் அமளி
இந்த நிலையில் இன்று 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. ராஜ்ய சபா சபாநாயகர் வெங்கையா நாயுடு தனது முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.
ராகுல் சந்திப்பு
இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிக்களோடு சேர்ந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று சந்திப்பு நடத்தினார். அவை தொடங்கும் முன்பாக எம்பிக்களோடு ஆலோசனை செய்தார். அதன்பின் எதிர்க்கட்சி எம்பிக்களோடு இணைந்து ராகுல் காந்தி தர்ணா போராட்டம் செய்தார். நாடாளுமன்றத்திற்கு வெளியே அமர்ந்து போராட்டம் செய்தனர்.
வெங்கையா நாயுடு விளக்கம்
எதிர்க்கட்சிகளின் இந்த போராட்டத்திற்கு ராஜ்ய சபா சபாநாயகர் வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்தார். 2 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயகமற்ற நடவடிக்கை என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் எம்பிக்களை சஸ்பெண்ட் செய்யும் உரிமை சபாநாயகருக்கு இருக்கிறது. நான் செய்தது தவறு என்று நாடாளுமன்றத்தின் எந்த விதியிலும் குறிப்பிடப்படவில்லை.
கோரிக்கை
நான் செய்தது தவறு என்று எதிர்க்கட்சியினர் எப்படி சொல்கிறார்கள் என்றே புரிந்துகொள்ள முடியவில்லை. 12 எம்பிக்கள் தங்கள் கருத்துக்கு மன்னிப்பு கேட்க முன்வரவில்லை. ஆனால் நான் எடுத்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று மட்டும் கோரிக்கை விடுகிறார்கள் என்று விமர்சனம் வைத்தார். இதையடுத்து அவையில் கொரோனா குறித்து விவாதிக்கப்பட்டது.
கொரோனா
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் மீண்டும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சத்தை மக்களிடம் இருந்து போக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இந்தியாவில் இன்று 2 ஓமிக்ரான் கொரோனா கேஸ்கள் கர்நாடகாவில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தொடர் 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் இரண்டு அவையும் ஒத்திவைக்கப்பட்டது.
அணை பாதுகாப்பு மசோதா
இதன் பின்னர் அமளிக்கு பின் அணை பாதுகாப்பு மசோதா மிக நீண்ட விவாதத்துக்குப் பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் ராஜ்யசபாவில் இன்று நிறைவேற்றப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக அமளி காரணமாக இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில் திமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பை மீறி மசோதா நிறைவேறிஉள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் முல்லைப்பெரியாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து தமிழ்நாட்டின் உரிமை பறிக்கப்படும் என்று திமுக குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.