ஒரே 2 நேரத்தில் விமானம்.. நடுவானில் ஒரே மாதிரி ஏற்பட்ட சம்பவம்.. உறைந்த பயணிகள்.. என்ன நடந்தது?
டெல்லி: டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்டு சென்ற ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் இரு விமானங்களில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், 2 விமானங்களும் ஆறு மணி நேர இடைவெளியில் மீண்டும் டெல்லிக்கு திரும்பியதால் பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.
டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி A320 என்ற ஏர் ஏசியா நிறுவனத்தின் விமானம் இயக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்திலிருந்து காலை 11.55 மணிக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் நடுவழியில் தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், விமானத்தில் தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக விமானி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மதியம் 1.45 மணியளவில் பயணிகள் அனவரும் பாதுகாப்பாக டெல்லி விமான நிலையம் வந்தடைந்தோம் என்று தெரிவித்தார்.

பின்னர் அந்தப் பயணிகளை மீண்டும் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் அழைத்து செல்வதற்காக மாற்று விமானம் ஏர் ஏசியா நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி விடி-ஆர்இடி என்ற பதிவெண் கொண்ட விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏற்றிச் செல்லப்பட்டனர். மதியம் புறப்பட்ட அந்த இரண்டாவது விமானத்தில் சில மணி நேரத்தில், தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாற்று ஏற்பாடாக புறப்பட்ட விமானமும் மீண்டும் டெல்லி விமான நிலையம் வந்தது. இதில் பயணிகள் யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. பயணிகளை பாதுகாப்பாக விமான ஊழியர்கள் அழைத்து வந்தனர்.
இதுகுறித்து ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்டு சென்ற விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் டெல்லி திரும்பியது. தற்போதைய சூழலில், அனைத்து தொழிற்நுட்ப கோளாறுகளும் சரி செய்யப்பட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட விமானத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பயணிகளின் பயண திட்டங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். பயணிகள் விரும்பினால் பயணத்தை ரத்து செய்துவிட்டு, கட்டணங்களை திரும்பிப் பெற்று கொள்ளலாம் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications