உலக அளவில் இந்துக்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை வேண்டும்.. கனடா தாக்குதலால் கொதித்த பவன் கல்யாண்
டெல்லி: சனாதன தர்மத்தை பாதுகாக்க தனது ஜனசேனா கட்சியில் புதிய அணியை உருவாக்கியுள்ள ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், கனடாவில் இந்து கோயில் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பிற சமூகங்களுக்கு காட்ட வேண்டிய அதே வேகத்தையும் அர்ப்பணிப்பையும் பாதிக்கப்படும் இந்து சமூகத்திற்கும் உலகம் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவில் அண்மைக்காலமாக விரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு கனடாவில் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் என்ற சீக்கிய பிரிவினைவாத தலைவர் கொலை செய்யப்பட்டார். அதில் இந்திய உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதால், இரு நாடுகளுக்கிடையிலான உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரம் இல்லாமல் கனடா குற்றம் சாட்டும் நிலையில், மத்திய அரசு கனடாவின் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், இதில் ஆதாரத்தைத் தரும்படியும் மத்திய அரசு கேட்டது. இருப்பினும், ஆதாரத்தைத் தராமல் கனடா அரசு வெறுமன குற்றஞ்சாட்டி மட்டுமே வந்தது.
இப்படி மோதல் போக்கு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில்தான், கனடாவில் டொரண்டோ நகருக்கு அருகே பிராம்டன் நகரில் உள்ள இந்து சபா மந்திர் என்ற இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தினர். இந்திய தூதர்கள் இருந்த போதே நடந்த இந்தத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்குக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொடங்கி அந்நாட்டிலேயே பலரும் கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடியும் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஆந்திர முதல்வர் பவன் கல்யாணும் கனடாவில் நடந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பவன் கல்யாண் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
இந்து கோவில் மீதும் இந்துக்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் வேதனை அளிக்கிறது. இது எச்சரிக்கை கொடுக்க கூடியது. கனடா அரசு உடனடியாக தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டும். அங்குள்ள இந்து சமூகத்திற்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அவசியம்.
இது இரக்கம் காட்ட வேண்டும் என்பதற்கான அழைப்பு இல்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான அழைப்பு. பிற சமூகங்களுக்கு காட்ட வேண்டிய அதே வேகத்தையும் அர்ப்பணிப்பையும் பாதிக்கப்படும் இந்து சமூகத்திற்கும் உலகம் காட்ட வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications