பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்!
டெல்லி: வளைகுடா போர் காரணமாக, இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இருப்பினும், இந்த அச்சம் காரணமாக வட மாநிலங்களில் பெட்ரோல் பங்குகளை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கியிருக்கின்றனர்.
நேற்று முன்தினம் அசாம் மாநிலத்திலும், அதற்கு முன்னர் குஜராத் மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட போகிறது என்று வதந்தி பரவியது. இதனையடுத்து மக்கள் பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுத்தனர்.

வாகனகங்களில் மட்டுமல்லாது வாட்டர் பாட்டில்கள், 20 லிட்டர் பெரிய தண்ணீர் கேன், அண்டா, குண்டா, குக்கர் என அனைத்திலும் பெட்ரோலை வாங்கி சென்றனர். இன்னும் சிலர், டிராக்டர்களில் 1000 லிட்டர் தண்ணீர் கேனை ஏற்றி வந்து, அதில் பெட்ரோலை பிடித்து சென்றனர். இதனால் பங்குகளில் கூட்டம் அலை மோதியிருந்தது. அதேபோன்ற சூழல் தற்போது ஹரியானாவில் உருவாகியிருக்கிறது.
எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக நடந்த கேபினேட் மீட்டிங்கில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, எரிபொருள் மீதான கலால் வரி நீக்கப்பட்டிருந்தது. அதாவது டீசல் மீதான கலால் வரி ரூ.10லிருந்து பூஜ்ஜியமாகவும், பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.13லிருந்து ரூ.3 எனவும் குறைக்கப்பட்டது.
இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. ஆனால், விலை உயராமல் இருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருப்பதால், மற்ற நாடுகளில் எரிபொருள் விலை அதிகரித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் இந்த விலையேற்றம் இல்லை. அதேபோல எரிபொருள் விநியோகம் சீராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
இவ்வளவு இருந்தும் கூட, பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்று வதந்திக்ள தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. இன்று ஹரியானாவில் இதுபோன்ற வதந்தி பரவியதால் பங்குகளை நோக்கி மக்கள் படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக உண்மையாகவே எரிபொருள் அவசரமாக தேவைப்படும் நபர்களுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications