ரஷ்யாவின் நட்பை முறிக்கும் இந்தியா? மோடி சந்திப்பில் டிரம்ப் போடும் கணக்கு! புதினுக்கு சிக்கல்
டெல்லி: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். பிப்ரவரி 13, 14 என்று 2 நாள் சுற்றுப்பயணமாக மோடி பிரான்ஸில் இருந்து அமெரிக்கா செல்ல உள்ளார். இந்த வேளையில் வர்த்தகம் ரீதியாக பிரதமர் மோடிக்கு டொனால்ட் டிரம்ப் ஒரு அழுத்தம் கொடுக்க உள்ளார்? இது ரஷ்யா - இந்தியா நட்பை பாதிக்குமா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை நாடு கடத்தும் பணியை டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ளார். முதற்கட்டமாக இந்தியர்கள் போர் விமானம் மூலம் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தி வரப்படுகின்றனர்.

இதற்கிடையே தான் பிரதமர் நரேந்திர மோடியுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்தித்து பேச உள்ளனர். டொனால்ட் டிரம்ப் - மோடி இடையே நல்ல நட்பு என்பது இருக்கிறது. கடந்த 2017 ம் ஆண்டு முதல் 2021 வரை அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தார். அப்போதும் நம் நாட்டின் பிரதமராக மோடி செயல்பட்டார். அந்த சமயத்தில் இருவருக்கும் இடையேயான உறவு நன்றாகவே இருந்தது.
இப்போது மீண்டும் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து, டிரம்ப்-மோடி கூட்டணி புத்துயிர் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதை உறுதி செய்வது போல் டிரம்பின் அடுத்தடுத்த மூவ் உள்ளது. அதன்படி பதவியேற்பு விழாவுக்கு சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் சீட் ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு பதவியேற்ற ஒரு மாதத்திலேயே பிரதமர் மோடியை சந்திக்க டொனால்ட் டிரம்ப் ஆர்வம்காட்டி அமெரிக்கா அழைத்துள்ளார்.
அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு நேற்று முதல் முறையாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரை சந்தித்தார். டிரம்ப் 2வது முறையாக அமெரிக்க அதிபரான பிறகு முதல் முறையாக அவர் சந்தித்த தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு. இதற்கு அடுத்தப்படியாக 2 வது தலைவராக தான் பிரதமர் மோடியை, டொனால்ட் டிரம்ப் சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடியும், டொனால்ட் டிரம்பும் தொலைபேசியில் பேசியுள்ளனர். கடந்த மாதம் 27 ம் தேதி பிரதமர் மோடியிடம், டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது தான் டொனால்ட் டிரம்ப் நேரடியாக பிரதமர் மோடியை அமெரிக்கா வெள்ளை மாளிகைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இதையடுத்து இந்த மாதம் இருவரும் சந்திக்க உள்ளனர்.
பிப்ரவரி 10, 11ம் தேதிகளில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஏஐ ஆக்ஷன் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதனை முடித்த பிறகு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் அமெரிக்காவில் பிரதமர் மோடி இருப்பார். வரும் 13ம் தேதி டிரம்ப்-மோடி சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடக்க உள்ளது.
இந்த சந்திப்பின்போது தான் இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மேலும் ஆசிய பிராந்திய விவகாரங்கள் பற்றியும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ரஷ்யாவை விட்டுவிட்டு தங்களிடம் ராணுவ தளவாடங்களை வாங்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியிடம் வலியுறுத்தலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது இந்தியா, அமெரிக்கா இடையே மிகப்பெரிய அளவில் வர்த்தகம் நடக்கிறது. கடந்த 2023-2024 நிதி ஆண்டில் மட்டும் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்து இருக்கிறது. இதில் அமெரிக்கா நமக்கு ஏற்றுமதி செய்ததை விட, நம் நாடு அமெரிக்காவுக்கு கூடுதலாக ரூ.2.76 லட்சம் கோடிக்கு பொருட்களை விற்று இருக்கிறது. இந்த வியாபாரத்தை தக்க வைக்கவும், கூடுதல் வர்த்கம் செய்வதற்கான வாய்ப்புகள் பற்றியும் மோடி பேசுவார்.
அதேவேளையில் இந்தியா நம் நாட்டில் அதிக பொருட்களை வர்த்தகம் செய்வதா? இதனை மாற்றியே ஆக வேண்டும் என்று மோடி விரும்புகிறார். அதாவது இந்தியாவும் - அமெரிக்காவுடன் சரிக்கு சமமான வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் நினைக்கிறார். இதனால் அமெரிக்க தயாரிப்புகளை இன்னும் அதிகமாக வாங்க இந்தியாவை அவர் நிர்பந்திக்க வாய்ப்புள்ளது. இதனை கடந்த மாதம் 27 ம் தேதி மோடியிடம் தொலைபேசியில் பேசியபோதே டொனால்ட் டிரம்ப் கோரிக்கையாக வைத்துள்ளார்.
அன்றைய தினம் மோடியிடம், ‛‛எங்களிடம் இருந்து பாதுகாப்பு சார்ந்த தளவாடங்களை அதிகமாக வாங்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். தற்போது நம் நாடு பாதுகாப்பு துறைக்கான ராணுவ தளவாடங்களை அதிகளவில் ரஷ்யாவிடம் இருந்து தான் வாங்கி வருகிறது. அதோடு தற்போது உள்நாட்டிலேயே நமக்கு தேவையானவற்றை தயாரிக்க மேக் இன் இந்தியா திட்டம் மூலம் நம் நாடு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இப்படியான சூழலில் தான் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பு சார்ந்த தளவாடங்களை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அதிகளவில் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை மோடி சந்திப்பிலும் டிரம்ப் வலியுறுத்துவார். ஒருவேளை அந்த டீலுக்கு பிரதமர் மோடி ஒப்புக்கொண்டால் ரஷ்யாவிக்கும் நமக்கும் இடையேயான பாதுகாப்பு துறை சார்ந்த வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. ரஷ்யாவிடம் வாங்கும் பொருட்களை குறைத்து அமெரிக்காவின் பக்கம் இந்தியா சாய வேண்டிய நிலை ஏற்படலாம். இது நடந்தால் ரஷ்யா - இந்தியா உறவில் விரிசல் ஏற்படலாம். இதனால் டிரம்ப் - மோடி சந்திப்பை இந்தியா, அமெரிக்கா மட்டுமின்றி ரஷ்யாவும் உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications