வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது திருப்புமுனை! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது திருப்புமுனை என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார். இன்றுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையும் நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதா நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வக்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றுவது என்று மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதனையடுத்து கடந்த புதன்கிழமை மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சுமார் 12 மணி நேர விவாதத்திற்கு பின்னர் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகியிருந்தன.
இதனை தொடர்ந்து மாநிலங்களவையில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவாகியிருந்தன. திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். பாமக இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது. அதே நேரம் தமிழ் மாநில காங்கிரஸின் எம்பி ஜி.கே.வாசன் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.
இந்நிலையில் மசோதா குறித்து தனது x தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "வக்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருப்பது ஒரு திருப்புமுனையாகும். நாட்டின் சமூக பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை,அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் வக்பு மசோதா ஒரு திருப்புமுனை. நீண்டகாலமாக குரல்களற்று, வாய்ப்புகள் வழங்கப்படாமல் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு வக்பு மசோதா பயனளிக்கும்.
இந்த மசோதாக்களுக்கு ஆதரவளித்த அனைத்து எம்பிக்களுக்கும் நன்றி. நாடாளுமன்ற குழுவிற்கு மக்கள் அனுப்பிய முக்கியமான ஆலோசனைகளும் இந்த மசோதா வலுப்பெற உதவியிருக்கிறது. இப்போது இந்தியா சமூக நீதியை முன்னிலைப்படுத்தும் மக்களின் உணர்வுகளை மதிக்கும் நவீன சட்ட கட்டமைப்புக்குள் நுழைகிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனின் கண்ணியத்தையும் பாதுகாப்பது முக்கியமான இலக்காக இருக்கிறது. இதன் மூலம் ஒருமைப்பாட்டையும், கருணையையும் அடிப்படையாக கொண்ட ஒரு வலுவான இந்தியாவை உருவாக்க முடியும்" என பிரதமர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications