புதிய சிபிஐ இயக்குநர் யார்? மோடி தலைமையில் 24ம் தேதி தேர்வு குழு கூட்டம்
டெல்லி: சிபிஐக்கு புதிய இயக்குநரை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிபிஐ இயக்குனராக பதவி வகித்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவிற்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு நாகேஸ்வர ராவை இடைக்கால இயக்குநராக நியமித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், அலோக் வர்மாவை மீண்டும் பணியில் அமர்த்தி உத்தரவிட்டதுடன், அவரது பதவி குறித்து, உயர்மட்டக்குழு கூடி ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க உத்தரவிட்டது.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதியான சிக்ரி ஆகியோர் கூடி ஆலோசனை நடத்தினர்.
இதில், அலோக் வர்மாவை தீயணைப்பு துறை இயக்குனராக மாற்ற முடிவெடுக்கப்பட்டது. மல்லிகார்ஜுன கார்கே மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அலோக் வர்மா மாற்றப்பட்டு, நாகேஸ்வர ராவ் மீண்டும் சிபிஐ இயக்குனராக பொறுப்பேற்றார்.
இதனிடையே, முறைப்படி, புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு குழுவில், பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications