நாட்டை வடக்கு-தெற்கு என காங்கிரஸ் பிரித்தாள்கிறது.. மாநிலங்களவையில் மோடி பேச்சு.. காங்கிரஸ் அமளி
டெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் இன்று பதிலளித்தார். அப்போது காங்கிரஸ் மீது கடும் விமர்சனத்தை வைத்ததால், காங்கிரஸ் எம்பிக்கள் மோடிக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர்.
கடந்த ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 2-ம் தேதி முதல் நடந்து வந்தது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதற்கு பதில் அளித்து, கடந்த 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார். இதனை தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார்.

இதில், காங்கிரஸ் கட்சி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பேசியதாவது, "கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவின் சிறப்பான ஆட்சியின் மூலம் இந்தியா, உலக பொருளாதாரத்தில் 5வது இடத்தை பிடித்திருக்கிறது. ஆனால் காங்கிரஸ், நாட்டை வடக்கு-தெற்கு என பிரித்தாள முயல்கிறது. எதிர் வரும் தேர்தலில் காங்கிரஸால் 40 தொகுதிகளில் கூட வெல்ல முடியாது. ஆனால், பாஜக 400 இடங்களில் வெல்ல மல்லிகார்ஜுன கார்கே ஆசி வழங்கியுள்ளார்" என்று கூறினார். இதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, "இன்று என்னுடைய பேச்சை நிறுத்தி, எங்களை அமைதிப்படுத்த முடியாது. நாங்கள் இந்நாட்டு மக்களிடமிருந்து பலம் பெற்றிருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சியில் எமர்ஜென்சி உட்பட எண்ணற்ற ஒடுக்குமுறைகள் நடந்தன. எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டதே என நானே கவலைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications