ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை ஒதுக்கிட்டீங்களே.. கொல்கத்தாவில் இருந்து போன் வந்ததா? காங்கிரஸை தாக்கிய மோடி!
டெல்லி: லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பதில் உரை ஆற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை காங்கிரஸ் கட்சி ஒதுக்கி வைத்துவிட்டதா எனக் கேள்வி எழுப்பி கடுமையாகச் சாடினார்.
பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பிரச்சனை குறித்து பேச வேண்டும் என இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது 3வது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்றது.

லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை பேசியதையடுத்து, காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார். அப்போது, பிரதமர் மோடியின் மவுனத்தைக் கலைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தோம் எனத் தெரிவித்தார்.
மேலும், நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று பிரதமரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பிரச்சனை குறித்து பேச வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். நாங்கள் எந்த பாஜக உறுப்பினரையும் அவைக்கு வரச் சொல்லவில்லை. பிரதமர் மோடி வரவேண்டும் என்றே கூறினோம்" எனத் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடியை திருதிராஷ்டிரனுடன் ஒப்பிட்டுப் பேசினார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. மன்னன் திருதராஷ்டிரன் குருடனாக அமர்ந்திருந்த போது, திரௌபதியின் ஆடைகள் பறிக்கப்பட்டன. அதே போல் இன்று நம் அரசனும் குருடனாக அமர்ந்திருக்கிறார் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசிய கருத்துக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் லோக்சபாவில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் பேச அனுமதி மறுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, லோக்சபாவில் இருந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதில் அளித்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எதிர்க்கட்சிகளால் ஒதுக்கப்பட்டு விட்டார். மக்களவை காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு பேச அக்கட்சி வாய்ப்பு வழங்கவில்லை, இதற்கு கொல்கத்தாவில் இருந்து வந்த நிர்ப்பந்தம் காரணமாக இருக்கலாம் என விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உள்ள சில விஷயங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத, கற்பனையில் கூட நினைக்காத அளவுக்கு விசித்திரமானவை. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி என்ன ஆனார்? அவரது கட்சி அவருக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை.
1999-ல் வாஜ்பாய் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது சரத் பவார் தலைமை வகித்தார். 2003-ல் வாஜ்பாய் ஆட்சியில் சோனியா காந்தி தலைமை வகித்தார். தற்போது ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார், ஆனால் அவரது கட்சி அவருக்குப் பேச வாய்ப்பளிக்கவில்லை. ஆனால் அமித் ஷா மற்றும் லோக்சபா சபாநாயகரின் பெருந்தன்மையால் தான் நேரம் முடிந்த பிறகும் அவருக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.
உங்கள் நிர்ப்பந்தம் என்னவென்று தெரியவில்லை, ஏன் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை காங்கிரஸ் ஒதுக்கி வைத்தது? கொல்கத்தாவில் இருந்து ஒரு போன் வந்திருக்கலாம், காங்கிரஸ் அவரை மீண்டும் மீண்டும் அவமதிக்கிறது. இதுபோன்ற தொடர்ச்சியான அவமானங்களால் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வார் என்று நான் அஞ்சுகிறேன்" என்று பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications