"அனைத்து கோணங்களிலும் விசாரணை.. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை.." பிரதமர் மோடி உறுதி
டெல்லி: ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, அதன் பின்னர் இந்த விபத்து குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஒடிசாவில் மிக மோசமான ஒரு விபத்து நடந்தது. அங்கே அடுத்தடுத்து வெறும் சில நிமிடங்களில் மூன்று ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானது. கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டில் இல்லாத வகையில் மிக மோசான விபத்தாக இது கருதப்படுகிறது.

இந்த விபத்தில் சுமார் 280 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (12841) பாலசோர் மாவட்டத்தில் பாஹாநாகா பஜார் என்ற ரயில் நிலையம் அருகே வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. அதேபோல 20 நிமிடங்களில் யஸ்வந்த்பூர்-ஹவுரா ரயிலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் இப்போது தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்த தகவல் வந்தவுடன் நேற்றிரவே ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தார். அதைத் தொடர்ந்து இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடியும் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தார். அங்கே நடந்து வந்த மீட்புப் பணிகளை அவர் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து மனவேதனை அளிக்கிறது.. ஒடிசா விபத்து தொடர்பாக அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தப்படும்.. உண்மை கண்டறியப்பட்டு.. ரயில் விபத்திற்குக் காரணமானோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்..
இப்போது தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.. காயமடைந்தோருக்குத் தேவையான சிகிச்சை தர மத்திய அரசு உதவும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications