இரண்டு தரப்பும் எதிர் திசையில் போறாங்க பாருங்க.. காங்கிரஸில் பிளவு இருக்கு.. லோக்சபாவில் மோடி அதிரடி
டெல்லி: காங்கிரஸ் கட்சி பிளவு பட்டு விட்டது, குழம்பிப் போயிருக்கிறது என்று லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து லோக்சபாவில் இன்று உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் விவசாயிகள் தொடர்பான பிரச்சனை பற்றி பேசிய போது ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது காங்கிரஸ் கட்சி பற்றி கடுமையாக விமர்சனத்தை முன் வைத்தார் நரேந்திர மோடி.
விவசாயிகளின் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளத்தான் வேளாண் சட்டங்கள்.. லோக்சபாவில் மோடி பேச்சு
பழைய கட்சி
அவர் பேசியதை பாருங்கள்: காங்கிரஸ் கட்சி இந்த நாட்டின் மிகப் பழமையான ஒரு கட்சி. 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட கட்சி. ஆனால், இப்போது நிலைமை பரிதாபமாக இருக்கிறது. ராஜ்யசபாவில் அந்த கட்சி ஒரு முடிவை எடுத்து ஒரு கோணத்தில் பயணிக்கிறது. ஆனால் லோக்சபாவில் அதே கட்சி வேறு கோணத்தில், வேறு திசையில் பயணிக்கிறது.
காங்கிரஸ் உடைந்துள்ளது
காங்கிரஸ் கட்சி குழப்பத்தில் இருக்கிறது, காங்கிரஸ் கட்சி உடைந்து போயிருக்கிறது. இது அந்த கட்சிக்கும் நல்லது கிடையாது. நாட்டின் பிரச்சனைகளுக்கு, தீர்வு காண்பதற்கும் இது உதவாது. இதைவிட துரதிஷ்டவசமானது வேறு எதுவும் இருக்க முடியாது.
லோக்சபா நிலைப்பாடு
காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் ராஜ்யசபாவில் இருக்கிறார்கள். அவர்கள் விவாதத்தின்போது மிகவும் ஆர்வத்தோடு பங்கேற்று தங்களது கருத்துக்களை எடுத்து வைக்கிறார்கள். ஆனால் லோக்சபாவில் வெளிநடப்பு செய்கிறார்கள். எதிலும் ஆக்கபூர்வமாக பங்கேற்பது கிடையாது. காலம் இதற்கான பதிலை சொல்லும்.
மக்கள் மதிப்பு
லோக்சபாவில் குழப்பத்தை ஏற்படுத்துவது, கூச்சல் குழப்பம் செய்வது போன்றவை மிகவும் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. உண்மைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்பதில்தான் இவர்கள் கவனம் இருக்கிறது. ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்களின் நன்மதிப்பை பெற்று விடமுடியாது, என பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்தார்.