மாடுகளை கட்டி அணைத்து, உச்சி முகர்ந்து உணவூட்டிய பிரதமர் மோடி.. மகர சங்கராந்தியை ஒட்டி உற்சாகம்!
டெல்லி: டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் வீட்டில் இன்று காலை பொங்கல் விழா கொண்டாடிய பிரதமர் மோடி, அதன் பிறகு தனது இல்லத்தில் மாடுகளுக்கு உணவளித்து மகிழ்ந்தார்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி பலரும் தங்களது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வீட்டில் இன்று காலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கரகாட்டம், சிலம்பாட்டம், பாடல் பாடுதல், பறையாட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பொங்கல் விழா மேடையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் என தமிழ் மொழியில் வாழ்த்து கூறினார். மேலும் 'தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு' என்ற திருக்குறளை தமிழில் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேசினார். பின்னர் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழர் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன.

தொடர்ந்து, மகர சங்கராந்தியை முன்னிட்டு தனது இல்லத்தில் மாடுகளுக்கு புல் மற்றும் உணவுகளை வழங்கினார் பிரதமர் மோடி. டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், ஏராளமான மாடுகளுக்கு உணவளித்து மகிழ்ந்தார் பிரதமர் மோடி. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை எனக் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளைப் போல, இந்தியாவின் பல பகுதிகளிலும் தை ஒன்றாம் நாள், மகர சங்கராந்தி, மகா பிஹு என பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. விவசாயம் செழிக்கச் செய்யும் சூரியக் கடவுளை வணங்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.














Click it and Unblock the Notifications