ஊரே எதிர்த்தாலும்... இந்தி மொழியில் மருத்துவக் கல்வி தொடங்கப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு!
டெல்லி: மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவ கல்வி தொடங்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தி அதிகாரப்பூர்வ அலுவல் மொழி. அம்மாநிலத்தில் இந்தி மொழியில் மருத்துவ கல்விக்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

தாய் மொழி கல்வி
பொதுவாக இந்தியாவில் தாய்மொழிக் கல்வியை அனைத்து மாநிலங்களும் வரவேற்கின்றன. அதனை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. அந்த வகையில் இந்தி மொழி பேசுகிற மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவ பாடப் புத்தகங்கள் வழங்குவது பாராட்டப்பட வேண்டியது; ஆனால் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை மட்டும் திணிக்கக் கூடாது என்பதுதான் மாநிலங்கள் வலியுறுத்துகின்றன.

அமித்ஷா குழு பரிந்துரை
அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் ஆய்வு மொழிக் குழு, இந்தி பேசாத மாநிலங்களில் அனைத்து மத்திய அரசின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியை கட்டாயமாக்க வேண்டும் என பரிந்துரைத்தது. அதேபோல் வேலைவாய்ப்புகளிலும் இந்தி மொழி அறிவு கட்டாயமாக்க வேண்டும் என்கிறது அமித்ஷா குழு பரிந்துரை.

இந்தி பேசாத மாநிலங்கள் எதிர்ப்பு
இப்பரிந்துரைக்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுத்தன. தமிழகம், மேற்கு வங்கத்தில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இரு மாநிலங்களிலும் ஆளும் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் இந்தி திணிப்பு போராட்டத்தை நடத்தின. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதமும் அனுப்பி இருந்தார்.

பிரதமர் மோடி பாராட்டு
இந்தப் பின்னணியில் இந்தி மொழியில் மருத்துவக் கல்வி தொடங்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் இந்தி மொழி மருத்துவ பாடப் புத்தகங்களை தொடங்கி வைத்த நிகழ்வை பதிந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ட்வீட்டைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, ட்வீட் செய்துள்ளார்; இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை, லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அவர்களின் சொந்த மொழியில் மருத்துவம் படிக்கவும், நாட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவும். இது மாணவர்களுக்கு பல வாய்ப்புகளை திறக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications