சீனாவுக்கு செக்! அரிய கனிமங்கள் விஷயத்தில் இந்தியா எடுத்த முக்கிய ஸ்டெப்! G20 மாநாட்டில் முன்னேற்றம்
டெல்லி: தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அரிய கனிமங்கள் விஷயத்தில் சீனா போன்று ஒரே ஒரு நாட்டை மட்டும் நம்பிக்கொண்டிருப்பதை தவிர்க்க புதிய யோசனையை முன்வைத்திருக்கிறார். இது அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்டால், விரைவில் இந்தியா கனிம வளர்ச்சியில் முக்கிய இடத்தை அடையும்.
பூமியில் மிக குறைந்த அளவே இருக்கும் லந்தனைடு, ஸ்காண்டியம், இட்ரியம் போன்ற கனிமங்கள்தான் அரிய கனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த கனிமங்களைக் கொண்டு சக்தி வாய்ந்த காந்தங்களை உருவாக்கலாம். இவை மின்சார வாகனங்கள் மற்றும் ராணுவ ஆயுத அமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல ஸ்மார்ட் ஃபோன்கள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க், டிவி, எல்இடி விளக்குகள், எம் ஆர் ஐ ஸ்கேனர்கள் ஆகியவற்றை தயாரிக்கவும் இந்த கனிமங்கள் பயன்படுகின்றன.

பிரச்சனை என்னவெனில் உலக அளவில் இந்த கனிம உற்பத்தியில் ஏறத்தாழ 90 சதவீதம் அளவுக்கு சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்தகப் போர் சமீபத்தில் தொடங்கிய நிலையில், சீனா தனது பலத்தை காட்ட.. அரிய கனிமங்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பதாக அறிவித்தது. இது அமெரிக்காவை மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளையும் கடுமையாக பாதித்தது.
குறிப்பாக இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உற்பத்தி சரிவை எதிர்கொண்டது. இனிமேல் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய முடியாது என்கிற அளவுக்கு இந்திய ஆட்டோமொபைல் துறை சீனாவின் தடையால் பாதிக்கப்பட்டது. இதையெல்லாம் பாடமாக எடுத்துக் கொண்ட இந்தியா இனி அரிய கனிமங்கள் உற்பத்தியில் சீனாவை மட்டும் நம்பி இருக்கக் கூடாது என்று முடிவெடுத்தது.
இப்படி இருக்கையில் தான் ஜி20 உச்சி மாநாட்டில் முக்கியமான கனிமங்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார். அதாவது அரிய கனிமங்களுக்கு தனி நாடுகளை சார்ந்து இருக்காமல், ஏற்கனவே தங்கள் நாடுகளில் இருக்கும் மின்னணு கழிவுகளில் இருந்து லித்தியம், கோபால்ட், நிக்கல் மற்றும் அரிய மண் தனிமங்களை பிரித்தெடுப்பதை செய்ய வேண்டும். இதற்கான தொழில் நுட்பத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.
இப்படி செய்வதன் மூலம் எதிர்காலத்தில் சீனா கனிமங்களை விற்க தடை விதித்தாலும் கூட அந்த பாதிப்பு நமக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அதேபோல ஜி20 நாடுகள் இந்த மறுசுழற்சி தொழில்நுட்பங்களுக்கான தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை உருவாக்கினால், சீனாவுக்கு வெளியே ஒரு பொதுவான சந்தையை அமைக்க முடியும். இப்படி செய்வதன் மூலம் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications