கொரோனா தடுப்பூசி திட்டம்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
டெல்லி: கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது.
இதனிடையே நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜனவரி 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கிறார். மதுரையில் ஜனவரி 16-ல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இதனிடையே கொரோனா தடுப்பூசி திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தற்போது அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர்.