"தமிழ்ல இதுக்கு ஒரு நல்ல வார்த்தை இருந்தா சொல்லுங்க!" மகளிர் மசோதா விவாதம்.. பிரதமர் வைத்த கோரிக்கை
டெல்லி: மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, வாக்குறுதி அல்லது உத்தரவாதம் போன்ற வார்த்தைகளில் தனக்கு உடன்பாடு உண்டு என்றும் தமிழ் மொழியில் இதற்கு இன்னும் பொருத்தமான சொல் இருந்தால் அதையும் பயன்படுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கான கிரெடிட்டை யார் எடுத்தாலும் தனக்குக் கவலை இல்லை.. முன்னேற்றம் மட்டுமே தனக்குத் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொகுதி மறுவரையறை மற்றும் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு தொடர்பான மசோதாக்களைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இன்றைய தினம் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டுள்ளது.. முதல் நாளான இன்றே மூன்று முக்கியமான மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யப்போகும் 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா மற்றும் தொகுதிகளை எப்படி மாற்றி அமைப்பது தொடர்பான மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

பிரதமர் மோடி
இது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து வரும் நிலையில், அதில் பிரதமர் மோடி உரையாற்றினார். "மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கான கிரெடிட்டை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.. எனக்குத் தேவை நாட்டின் முன்னேற்றம் மட்டுமே!" என நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த மசோதாவால் ஏற்கனவே 30 ஆண்டுகள் வீணாகிவிட்ட நிலையில், இனியும் தாமதிப்பது நாட்டுக்கே இழப்பு என்று அவர் எச்சரித்துள்ளார்.
வேண்டுகோள்
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைக்கு உரிமை கொண்டாடுவதில் தமக்கு எந்தப் போட்டியும் இல்லை என்று தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், "இதற்கான கிரெடிட்டை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் அதற்கான 'பிளாங்க் செக்' கொடுக்கவும் நான் தயார். தூய்மையான எண்ணம் இருக்கும்போது வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபடத் தேவையில்லை" என்று குறிப்பிட்ட பிரதமர், ஒரு சுவாரஸ்யமான வேண்டுகோளையும் முன்வைத்தார்.
தமிழில் ஒரு வார்த்தை
அதாவது வாக்குறுதி அல்லது உத்தரவாதம் போன்ற வார்த்தைகளில் தனக்கு உடன்பாடு உண்டு என்றும் தமிழ் மொழியில் இதற்கு இன்னும் பொருத்தமான சொல் இருந்தால் அதையும் பயன்படுத்தத் தயாராக இருக்கிறேன் என்றும் பிரதமர் மோடி கூறினார். மேலும், தேசத்தைத் துண்டுகளாகப் பார்க்கும் மனப்பான்மையை அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், நாம் அனைவரும் ஒரே தேசமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய தருணம் இது என்றும் அழைப்பு விடுத்தார்.
உள் ஒதுக்கீடு
உள் ஒதுக்கீடு தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்த பிரதமர் மோடி, "முதலில் 33 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் பெண்கள் நாடாளுமன்றத்திற்கு வரட்டும்.. அதன் பிறகு தங்களுக்குத் தேவையான உள் ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களை அவர்களே பேசி முடிவு செய்து கொள்வார்கள்.. இந்த நடவடிக்கை எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கோ அல்லது எனக்கோ சாதகமானது அல்ல.. இது முழுக்க முழுக்க தேசத்தின் பெண்களுக்கானது" என்றார்.
பிரதமர் மோடி வழக்கமாக நாடாளுமன்றத்தில் ஆவேசமாக தான் பேசுவார். ஆனால், இன்றைய உரை ஆரவாரமற்று இருந்தது.. ஒருமித்த கருத்தை நாடும் நோக்குடன் அவரது பேச்சு இருந்தது. இந்த மசோதாவுக்கு 3ல் இரு 2 பங்கு ஆதரவு தேவை.. அந்த நம்பர் என்டிஏ கூட்டணிக்கு இல்லை என்பதால் தான் பிரதமர் மோடி இப்படி பேசியிருக்கிறார்.. அதேநேரம் மசோதா தோல்வியடைந்தால், பாஜக எதிர்க்கட்சிகளை விமர்சிக்க ஆரம்பிக்கும்.












Click it and Unblock the Notifications