சிக்கிய 200 கோடி.. மக்களிடம் கொள்ளையடித்த ஒவ்வொரு ரூபாயையும் திருப்பி வழங்காமல் விட மாட்டோம்: மோடி
டெல்லி: ஒடிஷா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி வீடு, தொழிற்சாலைகளில் பீரோக்களில் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 200 கோடி ரொக்கமும் மக்களுக்கே திருப்பி தரப்படும் என பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான பவுத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஒடிஷா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒடிஷாவில் புவனேஸ்வர், சம்பல்பூர், பொலாங்கீர், திதிலாகர், பவுத், சுந்தர்கார், ரூர்கேலா ஆகிய இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன.

இச்சோதனைகளின் போது தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ200 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மட்டுமே சிக்கியது வருமான வரித்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த பணத்தை எண்ணும் பணிகளில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டன. முதலில் 8 பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு எண்ணப்பட்டன. பின்னர் மேலும் 3 இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது.

இந்த விவகாரத்தில் மேலும் பல காங்கிரஸ் எம்பிக்களுக்கு தொடர்பிருக்கலாம் என்பதால் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என பாஜக தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான படங்களைப் பதிவிட்டு எழுதி இருப்பதாவது: நமது நாட்டு மக்கள் இதனைப் பார்க்க வேண்டும். நேர்மையாளர்களாக, நேர்மையின் முகமாக தங்களை காட்டிக் கொண்டு இத்தகைய தலைவர்கள் பேசுவதை கேட்க வேண்டும். மக்களிடம் இருந்து திருடப்பட்டது இந்த பணம். மக்களிடம் திருடப்பட்ட, கொள்ளையடிக்கப்பட்ட இந்த பணம் மக்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும். இது மோடியின் வாக்குறுதி. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications