கொடியையே திருடித்தான் வச்சிருக்கீங்க.. காங்கிரஸ் கட்சியை சரமாரியாக தாக்கிய பிரதமர் மோடி!
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு என எந்த தனித்தன்மையும் இல்லை. கொடி, சின்னம் கூட திருடப்பட்டது தான். காந்தி என்ற பெயரை கூட இவர்கள் திருடித் தான் பயன்படுத்துகிறார்கள் என பிரதமர் மோடி லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் கலைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், பிரதமர் மோடி அவைக்கு வராத நிலையில், மத்திய அரசுக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி எம்.பிக்கள் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் வழங்கினர். இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் 3வது நாளாக தொடர்ந்து வருகிறது.

இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து உரையாற்றினார். இந்த உரையின்போது எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியையும், காங்கிரஸ் கட்சியையும் மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார் பிரதமர் மோடி. காங்கிரஸ் கட்சி கொடியையும், சின்னத்தையும் திருடி பயன்படுத்துகிறது என விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி பேசுகையில், "கடந்த 70 வருடங்களாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் உறங்கிக் கொண்டிருக்கிறது. அவநம்பிக்கையும் பேராசையும் நரம்புகளில் குடியேறிய எதிர்க்கட்சிகளிடம் பொதுமக்களின் நம்பிக்கையைப் பார்க்க முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு கடின உழைப்பின் மீது நம்பிக்கை கிடையாது. தற்போது வரை மன்னராட்சி மனநிலையில் செயல்பட்டு வருகிறது காங்கிரஸ். அக்கட்சியில் தொலை நோக்குப் பார்வை கொண்ட தலைவர்களும் கிடையாது.
காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஸ்தாபனம். பிரிட்டிஷ் பிரஜையான ஏ.ஓ.ஹியூம் தொடங்கிய கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் கட்சிக்கென தனித்தன்மை இல்லை. கொடி, சின்னம் கூட திருடப்பட்டது தான். காந்தி என்ற பெயரை கூட இவர்கள் திருடி தான் பயன்படுத்துகிறார்கள். காந்தியின் பெயரை நேரு குடும்பத்தினர் பயன்படுத்தலாமா? அம்பேத்கரையும் பாபு ஜெகஜீவன் ராமையும் அவமதித்த கட்சி காங்கிரஸ்.
இந்தியாவை காங்கிரஸ் எப்போதும் நம்பியது இல்லை. இந்தியாவுக்கு எதிரான அனைத்தையும் காங்கிரஸ் உடனடியாக பற்றிக்கொள்ளும். பாகிஸ்தானுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்ததில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடவடிக்கை எடுத்தபோது கூட காங்கிரஸ் அதில் மோசமான அரசியலை செய்தார்கள்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை காங்கிரஸ் கட்சி நம்பவில்லை. இந்தியாவை இழிவு படுத்தும் விஷயங்களால் காங்கிரஸ் மகிழ்ச்சி அடைந்தது. 1964ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்களுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்." என காட்டமாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications