நெருங்கும் சட்டப்பேரவை தேர்தல்! வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி ம.பி, ராஜஸ்தான் பயணம்
டெல்லி: மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று இவ்விரு மாநிலங்களுக்கும் பயணிக்கிறார்.
பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இந்த மாநிலங்களுக்கான பயணத்தை கடந்த 30ம் தேதி முதல் பிரதமர் மோடி துவங்கியுள்ளார். அக்டோபர் மாதம் 6ம் தேதி வரை இந்த மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைக்கவும், தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளவும் பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.

அதன்படி நேற்று தெலங்கானா மாநிலத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி முடிவுள்ள திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். அதேபோல ரூ.13,500 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையில், இதனைத் தொடர்ந்து இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.7,000 கோடி, மத்தியப் பிரதேசத்தில் ரூ.19,260 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ராஜஸ்தானின் சித்தூர்கருக்கு செல்லும் மோடி, அங்கு மெஹசானா-பதிண்டா-குர்தாஸ்பூர் எரிவாயு குழாய் இணைப்பை தொடங்கி வைக்கிறார். அதேபோல அபு சாலையில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் அமைத்துள்ள சமையல் எரிவாயு நிரப்பு நிலையத்தை தொடங்கி வைக்கிறார். கோட்டாவில் தேசிய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐ ஐடி) நிரந்தர வளாகம், பல்வேறு ரயில்வே திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
அதேபோல மத்திய பிரதேசத்தில், ரூ.11,895 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட தில்லி-வதோதரா விரைவுச்சாலையை மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும், ரூ.1,880 கோடி மதிப்பிலான 5 சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், நவம்பர்- டிசம்பர் மாதங்களில் அந்த மாநிலங்களுக்குப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications