பிரதமரே இப்படி பேசலாமா? இந்தியா கூட்டணியை இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிட்ட மோடி
டெல்லி: எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் பெயரை ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் பயங்கரவாத அமைப்பான இந்திய முஜாஹித்தீனுடன் பிரதமர் நரேந்திர மோடி ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.
பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் போட்டியிடப்போகும் 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் கடந்த வியாழன் அன்று கூடிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் மணிப்பூர் விவகாரத்தை சுட்டிக்காட்டி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மணிப்பூர் வன்முறை தொடர்பாக நாடாளுமன்ற அவைக்குள் பிரதமர் நரேந்திர மோடி பேச வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பியதால் பல முறை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் மூன்று நாட்களாக இரு அவைகளும் செயல்படாமல் உள்ளன. மக்களவையில் இது பற்றி விவாதிக்க அனுமதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அறிவித்தார்.
இருப்பினும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இதுபற்றி பேசும் வரை ஓய மாட்டோம் என்று முழங்கியதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், சபாநாயகரால் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை கண்டித்து விடிய விடிய இந்தியா கூட்டணி எம்பிக்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காலையிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர். இவ்வாறு இந்தியா என்ற கூட்டணி பெயரை அனைத்து எதிர்க்கட்சிகளும் பயன்படுத்த தொடங்கி உள்ளன. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
இன்றும் இதே கோரிக்கையை வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் மீது பிரதமர் நரேந்திர மோடி காட்டமான விமர்சனத்தை முன்வைத்து உள்ளார். திசை தெரியாத எதிர்க்கட்சிகள் என்று அவர்களை விமர்சித்து இருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் கூட்டணியை சிதறிய மற்றும் அவநம்பிக்கை கொண்ட கூட்டணி என்று சாடி இருக்கும் அவர், நீண்ட காலம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற ஆசை இல்லாதது போல் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அந்த கூட்டத்தில் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து பேசிய அவர் இந்தியா என்று எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு வைத்துள்ள பெயரை சுட்டிக்காட்டி விமர்சித்து உள்ளார்.
"கிழக்கு இந்திய கம்பெனியும் இந்தியா என்ற பெயரை பயன்படுத்தியது. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பும் இந்தியா என்ற பெயரை பயன்படுத்தியது. எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவது மற்றும் வேலைக்கு ஆகாது." என்று அவர் தெரிவித்து உள்ளார். முன்னதாக பாஜகவை சேர்ந்த அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயரை கேட்டவுடன் தனது ட்விட்டர் பயோவில் பாரத் என்று மாற்றியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications