ஜனவரி 10 முதல் 3வது டோஸ் தொடங்கப்படும்.. பிரதமர் மோடி அறிவிப்பு.. யாரெல்லாம் செலுத்திக்கொள்ளலாம்
டெல்லி: இந்தியாவில் முன்களப் பணியாளர்களுக்குக் கூடுதல் டோஸ் (முன்னெச்சரிக்கை டோஸ்) செலுத்தும் பணிகள் ஜன. 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டன.
அதன் பின்னரே வயதானவர்கள். இணை நோய் உள்ளவர்கள், 18 வயதைத் தாண்டியவர்கள் என வேக்சின் பணிகள் படிப்பாடியாக விரிவுபடுத்தப்பட்டது.

இந்தியா வேக்சின்
பணிகள் இந்தியாவில் முதலில் வேக்சின் பணிகள் சற்று மந்தமாகவே தொடங்கியது. வேக்சின் அச்சம் மற்றும் உற்பத்தியில் இருந்த சிக்கல் காரணமாக முதல் சில மாதங்கள் மெதுவாகவே வேக்சின் பணிகள் நடந்தது. இருப்பினும், அதன் டெல்டாவால் ஏற்பட்ட 2ஆம் அலைக்குப் பிறகு, வேக்சின் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெறத் தொடங்கியது. நாட்டில் தற்போது வரை 125 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது ஓமிக்ரான் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், பூஸ்டர் டோஸ் குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

3வதுடோஸ்
இந்தச் சூழ்நிலையில் முன்களப் பணியாளர்களுக்குக் கூடுதல் டோஸ் (முன்னெச்சரிக்கை டோஸ்) செலுத்தும் பணிகள் ஜன. 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்று நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, "ஜனவரி 10ஆம் தேதி முதல் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்குக் கூடுதல் டோஸ் (முன்னெச்சரிக்கை டோஸ்) தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும்.

யாரெல்லாம்
அதேபோல 60 வயதைக் கடந்தவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கை டோஸ் போட்டுக்கொள்ளலாம்" என்று அவர் குறிப்பிட்டார். ஓமிக்ரான் அச்சம் அதிகரித்து வரும் நிலையில் உலகின் பல்வேறு நாடுகளும் 3வது டோஸ் போடும் பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

உலக நாடுகள்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 3வது டோஸ் பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் நாட்டில் அனைவருக்கும் 3 டோஸ் செலுத்தும் பணிகள் முடிந்துவிட்டது. இஸ்ரேல் 4ஆவது டோஸ் குறித்து இப்போது சிந்தித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் 3வது டோஸ் தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. குறைந்தது சுகாதார ஊழியர்களுக்காவது முன்னெச்சரிக்கை டோஸ் பணிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ உட்கட்டமைப்பு
இன்று நாட்டில் 18 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், ஐந்து லட்சம் ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள், 1.4 லட்சம் ICU படுக்கைகள் மற்றும் குழந்தைகளுக்கான 90,000 சிறப்புப் படுக்கைகள் உள்ளன. நம்மிடம் 3,000க்கும் மேற்பட்ட செயல்பாட்டு ஆக்சிஜன் ஆலைகள் உள்ளன. ஏற்கனவே நான்கு லட்சம் சிலிண்டர்கள் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

2 ஆயுதங்கள்
உலகளாவிய நமக்கு உணர்த்துவது ஒன்று தான். கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுவதே சிறந்த ஆயுதம்! இரண்டாவது சிறந்த ஆயுதம் தடுப்பூசிகள். எனவே, அனைவரும் வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும். சிறுவர்களுக்கான வேக்சின் பணிகளும் ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்கப்படும்" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications