இந்தியர்களை ஈவிரக்கம் இல்லாமல் நாடு கடத்தும் டொனால்ட் டிரம்ப்.. பிரதமர் மோடி இன்று சந்திப்பு!
டெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கை கால்களில் விலங்கிட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு 2 நாட்கள் பயணமாக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கிறார்.
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் 20-ந் தேதி மீண்டும் பதவியேற்றார். டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா அதிபராக பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவரை கைது செய்து தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளார் டிரம்ப். இவர்களில் 104 இந்தியர்கள் அண்மையில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 104 இந்தியர்களும் கை, கால்களில் விலங்குகள் இடப்பட்டு போர் விமானத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மத்திய அரசு பல்வேறு விளக்கங்களை அளித்திருந்தாலும் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்தியர்களின் கதி என்ன என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமது பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்துவிட்டு இன்று அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, இந்தியர்கள் நாடு கடத்தல் விவகாரம் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து டிரம்ப்புடன் பிரதமர் மோடி விவாதிக்க இருக்கிறார்.
டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்கா அதிபரான நிலையில் பிரதமர் மோடி, அந்நாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. இந்த சந்திப்பின் போது இருதரப்பு வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
டொனால்ட் டிரம்ப்புடனான பிரதமர் மோடியின் சந்திப்பின் பின்னர் இரு தலைவர்களும் கூட்டறிக்கையை வெளியிடுவர் என்பது எதிர்பார்ப்பு. முன்னதாக பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, AI தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
பிரான்ஸ் AI உச்சி மாநாட்டில் மோடி
இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, வேலை இழப்பு என்பது செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய மிகவும் அஞ்சக் கூடிய இடையூறாகும். ஆனால், தொழில் நுட்பத்தால் வேலைவாய்ப்பு குறைவதில்லை என்பது வரலாறு. அதன் தன்மை மாறுகிறது மற்றும் புதிய வகையான வேலைகள் உருவாக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு நமது மக்களுக்கு திறன் பயிற்சி அளித்தல் மற்றும் மறு திறன் பயிற்சி அளித்தலுக்கு நாம் முதலீடு செய்ய வேண்டும். செயற்கை நுண்ணறிவுக்கு அதிக ஆற்றல் தேவைப்படும் என்பது கவனிக்கப்பட வேண்டும். அதன் எதிர்காலத்திற்கு எரிபொருளாக பசுமை சக்தி தேவைப்படும் என தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா பயணம் குறித்து பிரதமர் மோடி
பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக வெளியிட்டிருந்த அறிக்கையில், பிரான்சிலிருந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பின் பேரில் அமெரிக்காவிற்கு இரண்டு நாள் பயணமாகச் செல்கிறேன். எனது நண்பர் அதிபர் டிரம்ப்பைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜனவரியில் அவர் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்று பதவியேற்றதைத் தொடர்ந்து இது எங்கள் முதல் சந்திப்பாக இருந்தாலும், இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே ஒரு விரிவான உலகளாவிய திட்டமிட்ட கூட்டாண்மையை உருவாக்குவதில் அவரது முதலாவது பதவிக்காலத்தில் இருந்து இணைந்து பணியாற்றியதை மிகவும் அன்புடன் நினைவு கூர்கிறேன்.
அவரது முதலாவது பதவிக்காலத்தில் எங்களது ஒத்துழைப்பின் வெற்றியைக் கட்டமைக்க இந்தப் பயணம் வாய்ப்பாக அமையும். தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய விநியோகச் சங்கிலி மீள்தன்மை உள்ளிட்ட துறைகளில் நமது கூட்டாண்மையை மேலும் அதிகரிக்கவும், வலுப்படுத்தவும் ஒரு திட்டமிடலை உருவாக்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். நமது இருநாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். மேலும் உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்போம் என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications